ஞாயிறு, 25 ஜனவரி, 2009

சிபிஎஸ்இ-க்கு நிகராக மதரசா சான்றிதழ்கள்: மத்திய அரசு முடிவு

டெல்லி: மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை மத்திய அரசின் சிபிஎஸ்இ பள்ளிகள் வழங்கும் சான்றிதழ்களுக்கு சமமாக கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 7 ஆயிரம் மதராசாக்கள் உள்ளன. அவற்றில் சுமார் 3.5 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.

மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கும், சிபிஎஸ்இ மாணவ, மாணவியருக்கும் இடையே நிறைய வித்தியாசம் உள்ளன.

உதாரணத்திற்கு மதரசாவில் ஒரு மாணவன் ஐந்தாவது வகுப்பு படிப்பதாக இருந்தால், அதே வயதுடைய சிபிஎஸ்இ மாணவன், தனது பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பான்.

இதனால் மதரசாவில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு பெரும் பாதிப்பு ஏற்படுவதாக மத்திய அரசு கூறப்பட்டு வந்தது.

இதைப் பரிசீலித்த மத்திய அரசு தற்போது மதரசாக்கள் வழங்கும் சான்றிதழ்களை, சிபிஎஸ்இ சான்றிதழ்களுக்கு நிகராக மதிப்பிட முடிவு செய்துள்ளது.

அதன்படி, மதரசாக்களுக்கு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு நிகரான அந்தஸ்தை மத்திய அரசு அளிக்கவுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த அகமது சிராஜ் என்ற 13 வயது மாணவன் டெல்லி சாந்தினி சவுக் மதராசாவில் 5ம் வகுப்பு படிக்கிறார். ஆனால் மற்ற பள்ளிகளில் பயிலும் இவன் வயதுடைய மாணவர்கள் தற்போது 9ம் வகுப்பு படிக்கிறார்கள்.

சிராஜ் இன்னும் மூன்று ஆண்டுகளில் கல்லுரியில் சேர வேண்டும். ஆனால் இவர் இதுவரை மத புத்தகங்களை மட்டுமே படித்துள்ளார். கல்லுரியில் தான் முதன்முறையாக ஆங்கிலம் மற்றும் கணிதத்தை படிக்க இருக்கிறார்.

இவரது சீனியர்கள் பலரும் உருது மற்றும் யுனானி கற்று வருகின்றனர். ஆனால் தான் வித்தியாசமாக சமஸ்கிருதம் படிக்க போவதாக சிராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், அரபி மொழியை பலராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. அது போல தான் சமஸ்கிருதமும். அடுத்து சமஸ்கிருதம் படிப்பேன். சிபிஎஸ்இயின் அறிவிப்பு எனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு என்றார் சிராஜ்.

ஜெய்சுமுதீன் என்பவர் கூறுகையில், அரசின் முடிவால் தற்போது எங்களால் டாக்டர் மற்றும் என்ஜீனியர்களாக முடியும். பிபிஓக்களிலும் வேலை பார்க்க முடியும் என்றார்.

டெல்லி ராம்ஜாஸ் கல்லூரி முதல்வர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், தேவைப்பட்டால் மதரசா மாணவர்களுக்கு பாடங்களை அடிப்படையிலிருந்து நடத்த தயாராக இருக்கிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை: