புதன், 4 ஜனவரி, 2012

இஸ்லாமிய பக்கீர்களின் இந்திய சுதந்திரப் போர்!

இன்று சுதந்திரத்தின் பொருள் திரிந்துள்ளது போல, சுதந்திரப் போராட்ட வரலாறும் திரித்து எழுதப் பட்டு வருகிறது! சுதந்திரம் பெறுவதற்காக காங்கிரஸ் கட்சியும் பாரதீய ஜனதாவும் பாடுபட்டது போல ஒரு மாயத்தோற்றம் ஏற்படுத்தப் படுகிறது! தவிர சுதந்திரம் பெறுவதற்கு போராடியவர்களும் கூட இந்துகள் என்பதுபோலவும், இந்துகளுக்கு மட்டுமே வாங்கப்பட்ட சுதந்திரம் போலவும் சித்தரிப்புகள் நடந்து வருவதை பார்க்க முடிகிறது! இன்று இவர்கள் மட்டுமே இந்திய தேச பக்தர்களாக மிகைபடுத்தப் பட்டு வருகிறார்கள்! இந்திய தேசம் இவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதுபோலவும், இந்த நாடு இவர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப் பட்டுள்ளது போலவும் இவர்கள் பேசியும் எழுதியும்,ஊடகங்களில் விளம்பரம் செய்து வருவதையும் பார்க்கும்போது அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை!



இன்று சுதந்திரம் பெறுவதற்கு, "காரண கர்த்தாவாக" காட்டப்படும் எவரையும் விட, சுதந்திரத்திற்காக போராடியவர்கள் முஸ்லிம்களும், தாழ்த்தப் பட்டவர்களும் ஆவர்! இவர்களிலும் பக்கீர்கள் என்று இன்றும் அழைக்கப் படும் முஸ்லிம்களில் நாடோடியாகவும் , வறுமை நிலையிலும் வாழும் பல்லாயிரம் இந்திய முஸ்லிம்கள்,அன்று சுதந்திரத்திற்காக எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி போராட்டம் நடத்தி உள்ளனர்! முஸ்லிம்களுக்கு ஆங்கிலேயர் மீது சொல்லொண்ணா கோபமும் வெறுப்பும் இருந்தது! ஆங்கிலேயர்கள் உள்ளிட்ட அந்நியர்களின் படையெடுப்புக்கு முன்பு, இந்தியாவை பரவலாக ஆட்சி செய்தவர்கள் முஸ்லிம்கள்தான்!


டெல்லியை தலைநகரமாக கொண்டு,592 ஆண்டுகள் 46 அரசர்களும்,பாமினி ராஜ்யத்தை 170 ஆண்டுகள் ௧௭ மன்னர்களும் ,மால்வா ராஜ்யத்தை 130 ஆண்டுகள் 7 மன்னர்களும்,குஜராத்தில் 136 ஆண்டுகள் 9 மன்னர்களும்,பீஜப்பூரை 127 ஆண்டுகள் 9 மன்னர்களும்,கோல்கொண்டாவில் 196 ஆண்டுகாலம் 14 சுல்தான்களும்,பெராரில் 8 ஆண்டுகாலம் 4 மன்னர்களும் பீதரில்,135 ஆண்டுகள் 12 மன்னர்களும்,அவுரத்தை 35 ஆண்டுகள் 12 நவாபுகளும்,ஆந்திராவை,230 ஆண்டுகள் 12 நிசாம்களும் வங்காளத்தை 67 ஆண்டுகள் 10 அரசர்களும் தென்னகத்தை 22 ஆண்டுகள் 2 சுல்தான்களும்,(ஹைதர்,திப்பு) ஆற்காட்டை 135 ஆண்டுகள் 12 நவாபுகளும் ஆண்டனர்!


ஆங்கிலேயர்கள் ஆட்சியை கைப்பற்றி, நம்மை அடிமைப் படுத்தும் வரை ஆண்டுவந்த முஸ்லிம்கள், தங்களது ஆட்சியும் அதிகாரமும் பறிக்கப் பட்டதால், சுதந்திரப் போரில் ஆங்கிலேயர்களை அகற்றும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்!. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருந்த முஸ்லிம்கள், கிருத்துவ மதத்தைப் பின்பற்றிய ஆங்கிலேயர்களிடம் ஆட்சியை இழந்து, அடிமைப்பட்டு வாழ்வதை வெறுத்தனர். ! எனவே, ஆங்கிலேயர்களை தீரமுடன், வீரமுடன், விவேகத்துடனும் எதிர்த்தனர்,போரிட்டனர் என்பது வரலாற்றில் வெளிச்சமிடாத பக்கங்களாகும்.!

ஆங்கிலேயர்களிடம் இந்திய அடிமைப்படும் முன்பு இந்திய ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் முஸ்லிம்கள் என்பதால், முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்துவந்த முஸ்லிம் படை வீரர்களும் அவரது குடும்பத்தாரும் ஆங்கிலேய ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப் பட்டனர், ஆங்கிலேயர்களின் படைகளில் முஸ்லிம்களைச் சேர்ப்பதை தவிர்த்து வந்தனர்! இதனாலும் வறுமையில் வாடிய முஸ்லிம் போர்வீரர்கள், நாடோடிகளாக ஆக்கப்பட்டனர்! ஆங்கிலேயருக்கு எதிராக தீவிர போராட்டத்தை மேற்கொள்ளும் நிலைக்கு ஆளாயினர்! இப்படி ஆங்கிலேயருக்கு எதிராக, நாடு முழுவதும், பக்கீர்களாக சுற்றி திரிந்த முஸ்லிம்களின் போராட்டம் பல்வேறு யுத்திகளையும் தந்திரங்களையும் கொண்டிருந்தது,!


" தப்ஸ்" என்ற "சிறிய பறை" போன்ற இசைக் கருவியை வைத்திருக்கும் பக்கீர்கள் அதனை இசைத்தும், ஒலி எழுப்பியும் பொதுமக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்த்துவிடும் ஆற்றல் படைத்து இருந்தனர். இரண்டு பொருள்பட பாடவும், மறைமுகமாக தாங்கள் சொல்லவந்த கருத்தை உரியவர்களுக்கு சொல்லும் திறனுடையவர்களாக இருந்தனர்!. எளிய,கவிதைகளை,பாடல்களை இயற்றும் திறமையும் அவர்களுக்கு இருந்தது! திருவிழா, சந்தை,கடைவீதி,முதலிய பொதுமக்கள் மிகுதியாக கூடும் இடங்களில் இவர்கள், ஆங்கிலேயருக்கு எதிராகவும், அவர்களது ஆட்சியை அகற்ற வேண்டிய அவசியத்தையும்,சுதந்திரம் குறித்த உணர்வையும் எளிதில் விளக்கி புரியவைத்தனர்! ஆங்கிலேயருக்கு எதிராக பொதுமக்களை ஒன்று திரட்டும் பணியை செய்தனர்! போதுபக்களின் ஒத்துழைப்பு இன்றி,சுதந்திரம் பெறுவது சாத்தியம் அற்றது இன்பது இவர்களுக்கு தெரிந்து இருந்தது.



' பொம்மலாட்டம்' என்ற பெயரில்,ஆங்கில பொம்மை ஒன்றை, பிரான்சு பொம்மை அடித்து வீழ்த்துவதுபோல காட்டுவார்கள். இதன்மூலம் பிரான்சு உதவியுடன் ஆங்கிலேயர்கள் வீழ்த்தப் படுவார்கள் என்றும்,உலகம் முழுவதும் பிரன்சினரிடம் ஆங்கிலேயர்கள் தோல்வி அடைந்து வருகின்றனர் என்று கூறி,ஆங்கிலேயர் வெல்லமுடியாதவர்கள் அல்ல என்று சொல்லி, பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தினர். ஆங்கிலேய படைகள் உள்ள இடங்களுக்கு விதை காட்டுவதுபோல சென்று ஒற்றுவேலை பார்த்தார்கள்! ஆங்கில படையில் இருக்கும் இந்திய சிப்பாய்களிடம் குழப்பத்தை விளைவித்து,ஆங்கிலேய சிப்பாய்களும்,இந்திய சிப்பாய்களும் ஒன்றுபட முடியாதபடி பார்த்துக் கொண்டார்கள்! இதனால், ஆங்கிலேயர்கள் அவர்களது படையைப் பார்த்து பயப்படும் நிலையை பக்கீர்கள் ஏற்படுத்தினார்கள். ஆங்கிலேய படையில் இருந்து வெளியேற விரும்பும் இந்திய சிப்பாய்களை தங்களது தோற்றத்தில், மாறுவேடம் போட்டு வெளியேற்றியும்,இந்திய சிப்பாய்களின் குடும்பத்தை ஆங்கிலேயருக்கு தெரியாத இடங்களுக்கு முன்பே இடம்பெயரச் செய்து,மாற்றியும் உதவினர்.

தங்களது நலனை கருதாது,காடு,மேடு எல்லாம் சுற்றி வந்து, ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய இஸ்லாமிய பக்கீர்கள், இந்திய வரலாற்றில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளில் ஒன்று வேலூர் புரட்சியாகும்! இந்த புரட்சிக்கு வித்திட்டவர்களும்,நம்பிக்கை அளித்து நடத்தியவர்களும் இஸ்லாமிய பக்கீர்களே ஆகும்!

கருத்துகள் இல்லை: