செவ்வாய், 17 ஏப்ரல், 2012

உலகிலேயே அதிகம் வெறுக்கப்படும் நபர்

இந்தியா உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்பதற்கு இரண்டு முக்கியக் காரணங்கள் சமூக ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. உள்நாட்டில் அது தொடர்ந்து பேணிவரும் மதச்சார்பற்ற மாண்பும், சமதர்ம சமுதாயம் அமைப்பதே அது முக்கியக் குறிக்கோள் என்று அறிவித்ததும், வெளியுறவுக் கொள்கையளவில் இந்தியா கடைப்பிடித்து வரும் அணிசேரா நடுநிலைக் கொள்கையுமே இந்தியாவை உலக அளவில் தலைநிமிரச் செய்தது.

இத்தகைய சிறப்பினைப் பெற்றிருந்த இந்தியத் திருநாட்டின் பெருமைக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக பாப்ரி மஸ்ஜித் தகர்ப்பு அமைந்தது. பாசிசவாதிகளின் இந்த தீய செயல் இந்தியாவின் வளர்ச்சியை குறைந்தபட்சம் கால்நூற்றாண்டு பின்தங்கச் செய்தது என்றால் அது மிகையல்ல. இந்த அறம் கொன்ற தேசவிரோதச் செயலில் குற்றவாளிகளாக 68 பேரை லிபர்ஹான் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த வேதனைச் செயல் நிகழ்ந்து 10 ஆண்டுகள் முடிவடைவதற்குள் குஜராத் இனப்படுகொலை நிகழ்ந்து உலகின் இதயங்களை ரணமாக்கியது. 21ஆம் நூற்றாண்டின் முதல் இனப்படுகொலையான குஜராத் இனப்படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான மோடியை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை விதிக்க வேண்டும் என்ற குரல் சர்வதேச அளவில் எதிரொலித்தது. இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மோடி நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

மோடியின் கொடூரச் செயல்கள் அம்பலமானதால் மோடிக்கு வெளிநாடுகளில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செயல்கள் குறித்து சட்டை செய்யாத பாசிச சக்திகள் ஒரு மிகப்பெரிய நரித்தனத்தை செய்தன. மூவாயிரம் முஸ்லிம்களைக் கொலை செய்ததைப் பாராட்ட(!) வேண்டும் என நினைத்தார்களோ என்னவோ... மோடியை வளர்ச்சியின் நாயகன் என்றார்கள். மோடியை வல்லவர், நல்லவர் என கூசாமல் பொய்ப் புகழ் பரப்புரை செய்த காலக்கட்டத்தில் மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசுவும், திரிபுராவில் நிருபன் சக்கரவர்த்தியும் கேரளாவில் ஏ.கே.அந்தோனியும் எளிமையும் திறமை யும் வாய்ந்த முதல்வர்களாகத் திகழ்ந்தனர். ஆனால் அவையெல்லாம் வெகுஜன ஊடகங்களுக்கு கண்ணில் படவேயில்லை.

மோடியைப் போல் உண்டா? மோடியே வளர்ச்சியின் நாயகன் என செயற்கையான முறையில் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். பாசிசவாதிகளின் ஐந்தரை கோடி குஜராத் மக்களையும் அவமானப்படுத்தியதாகவே நாட்டு மக்கள் நினைக்கத் தொடங்கினர். காரணம் குஜராத்தின் வளர்ச்சி மோடியால் விளைந்ததல்ல, நூற்றாண்டு காலமாக குஜராத் வளர்ச்சியின் உச்சத்தில் உள்ள மாநிலம்தான். இருப்பினும் மோடியைத் தூக்கி நிறுத்துவதற்காகவே இந்தப் பொய்ப்பிரச்சாரம் என்பதை விளக்கத் தேவையில்லை. மோடி மீதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் கொண்டு வரப்பட்டு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி என புதிய பொய்ப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. மோடி அடுத்த பிரதமர் என பொய்ப்பரப்புரை அனல் பறந்தன. இருப்பினும் பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட தேர்தல் பிரச்சாரத்திற்கு மோடி அழைக்கப்படவே இல்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் டைம் பத்திரிக்கையில் உலகின் பிரபலமான 100 பேர் வரிசையில் மோடியும் பட்டியலிடப்பட்டார். மோடியின் அடிப்பொடிகள் ஆனந்தக் கூத்தாடி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இணைய பயன்பாட்டாளர்கள் அனைவரும் மோடிக்கு ஆதரவாக வாக்குகளைக் குவித்தனர். மேல்தட்டு மக்கள் இதனையே அன்றாடக் கடமையாகக் கொண்டு திரிந்தனர். செயற்கையான பரபரப்பை ஏற்படுத்தி 2 லட்சத்து 56 ஆயிரம் வாக்குகள் மோடி பெற்றார். ஆனால் சரித்திரம் சந்தித்திராத வகையில் இதுவரைக்கும் யாருக்குமே நிகழாத ஒன்று நிகழ்ந்தது.

ஆம் மோடிக்கு எதிர்வாக்குகள் 2 லட்சத்து 66 ஆயிரம் விழுந்தன. இந்த ஆண்டின் உலகில் அதிகம் வெறுக்கப்படும் நபர் என்ற பெயரை மோடி பெற்றுவிட்டதாகக் கூறியதோடு நவீன நீரோ மன்னன் என இந்திய உச்சநீதிமன்றம் இடித்துரைத்ததையும் டைம் இதழ் தனது அட்டைப் படத்தில் பகிரங்கப்படுத்தியுள்ளது. இனப்படுகொலையாளன் உலக அளவில் மீண்டும் அவமானப்படுத்தப்பட்டிருக்கிறார். மோடி விரைவாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என சர்வதேச சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.


கருத்துகள் இல்லை: