ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

யார் இந்த பிரவீன் சுவாமி ?

தரமான செய்திகளை தருபவர் என்று பலராலும் நம்பப்படுபவர். தி ஹிந்துவிலும், ஃப்ரண்ட்லைனிலும் பல காலமாக எழுதி வருபவர். சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்ற பத்திரிக்கையாளர். சாதனையாளர் விருதுகள் பல பெற்றவர்.

இந்தியாவில் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் ஹிந்துவிலும், ஃபிரண்ட் லைனிலும் தவறாமல் இவரது கட்டுரை இடம்பெறும். சொல்லி வைத்தாற்போல் நடந்த அத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் ஏதாவது ஒரு காரணததை இவராகவே கற்பனை செய்து கொண்டு கண் காது மூக்கு எல்லாம் வைத்து படிப்பதற்கு சுவாரஸ்யமாக செய்திகளை தருவதில் கில்லாடி.

1.)2007 பிப்ரவரி 20ல் சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு கோச்சுகளில் குண்டு வெடித்து 66 முஸ்லிம்கள் இறந்தனர். புலனய்வின் அறிக்கை வருவதற்கு முன் இவர் ஃப்ரண்ட்லைனில் எழுதிய கட்டுரையின் தலைப்பு 'அமைதிக்கு எதிரான சதி'. 'இந்தியா பாகிஸ்தான் நட்புறவை விரும்பாத பாகிஸ்தானிய இஸ்லாமியவாதிகள்தான் இந்த குண்டு வெடிப்பை நடத்தியுள்ளனர்' என்பது அவர் எழுதிய கட்டுரையின் சாராம்சம். இதற்கு ஆதாரமாக இவராக சுயமாக சில சம்பவங்களை முடிச்சுப் போட்டு தனது கைவரிசையை காட்டியிருந்தார்.

முடிவில் என்ன ஆயிற்று? அந்த குண்டு வெடிப்பை நிகழ்த்தியது நாங்கள்தான் என்று சுவாமி அசிமானந்தா ஆசி வழங்கியுள்ளார்.

2.) 2007 மே 19ல் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிக்கின்றது. வெள்ளிக் கிழமை தொழுகைக்கு வந்த 9 முஸ்லிம்கள் அநியாயமாகக் கொல்லப்படுகின்றனர். அந்த சம்பவத்தை எதிர்த்துக் கண்டனப் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 5 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது அதை விடக் கொடுமை. இப்படி முஸ்லிம்கள் உயிர் அங்கு பலியாகியிருக்க நான்கு நாட்கள் கழித்து 2007 மே 23 அன்று தி ஹிந்து நாளிதழில் பிரவீன் சுவாமி ஒரு செய்திக் கட்டுரை எழுதுகிறார்.

தலைப்பு: 'மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பிற்கு பின்னால்'

துணை தலைப்பு: 'வகுப்பு வாத வன்முறை, ஒழுங்குபடுத்தப்பட்ட குற்றம், உலக அளவிலான ஜிஹாத், ஆந்திர பிரதேச தலைநகரை உலுக்குகிறது'

இந்தியாவின் நகரங்களுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் வைத்த குறி அப்படியே இருப்பதாகவும் அதன் ஒரு முன்மாதிரிதான் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு என்றும் திருவாய் மலர்ந்துள்ளார். இதற்கு காரணம் லஸ்கர் இ தொய்பா என்றும் கண்டுபிடித்திருந்தார்.

ஆனால் இன்று என்ன ஆயிற்று? மக்கா மஸ்ஜிதில் நாங்கள்தான் குண்டு வைத்தோம் என்று நீதி மன்றத்தில் அடித்துச் சொல்கிறார் அசீமானந்தா.

3.) 2007 அக்டோபர் 12 ந்தேதி அஜ்மீர் தர்ஹாவில் குண்டு வெடிக்கிறது. புனித ரமலான் நோன்பு துறக்க வந்த நோன்பாளிகள் 3 பேர் தங்கள் நோன்புகளைத் துறக்காமலேயே கொல்லப்பட்டனர். 28 நோன்பாளிகள் படுகாயமுற்றனர்.

மறுநாள் வழக்கம் போல் தி ஹிந்து பத்திரிக்கையில் பிரவீன் சுவாமி ஒரு கட்டுரை எழுதுகிறார்.

தலைப்பு: 'பாப்புலர் இஸ்லாமுக்கு எதிரான போர்'

'பாப்புலர் இஸ்லாம்' என்று இவர் கூறுவது பெரும்பாலான முஸ்லிம்கள் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்பதாகும்.அதாவது தர்ஹா வழிபாட்டை பிடிக்காத இஸ்லாமிய தீவிரவாதிகள் அஜ்மீர் தர்ஹாவில் குண்டு வெடிக்கச் செய்துள்ளார்கள் என்கிறார். 2006 ஆம் ஆண்டு மாலேகானில் ஒரு தர்ஹாவில் நடந்த குண்டு வெடிப்பிற்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்கிறார்.

ஆனால் அசீமானந்தாவோ ' அஜ்மீர் குண்டு வெடிப்பை நடத்த திட்டமிட்டது இந்திரேஷ் குமாரும், சுனில் ஜோஷியும் என்கிறார். இவர்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸின் முக்கிய புள்ளிகள். 'தர்ஹாவை ஏன் குண்டு வெடிப்புக்கு தேர்ந்தெடுத்தீர்கள்' என்று கேட்டதற்கு 'இந்துக்கள் அஜ்மீர் தர்ஹாவுக்கு செல்வதை தடுக்கவும், முஸ்லிம்களை பழி வாங்கவும்' என்கின்றனர் இந்த மாபாதகர்கள்.

அசிமானந்தா ஏன் இந்த உண்மைகளை எல்லாம் கோர்ட்டில் போட்டு உடைத்தார் என்பதன் பிண்ணனியையும் பார்த்து விடுவோம். தெரிந்த விபரம்தான் ஆனாலும் புதிதாக படிப்பவர்களுக்கு:

நவம்பர் 19, 2010 அன்று கைது செய்யப்பட்ட அசிமானந்தா ஹைதரபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு சம்பந்தமாக விசாரிக்கப்பட்டு ஹைதராபாத்தின் சன்கால்குடா மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அப்போது அவருடன் 21 வயதான அப்துல் கலீம் என்ற முஸ்லிம் இளைஞனும் அடைக்கப்பட்டிருந்தார்.அசிமானந்தாவுக்கு உணவு பானங்களை எடுததுச் செல்வது. பணிவிடைகள் செய்வது என அனைத்து உதவிகளையும் அப்துல் கலீம் செய்துள்ளார். இந்த இளைஞனின் செயல்களால் கவரப்பட்ட அசிமானந்தா அவனின் வாழ்க்கை குறித்து விசாரித்துள்ளார். மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களில் அப்துல் கலீமும் ஒருவர். கடுமையான சித்தரவதைகளுக்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாக்கப்பட்ட பிறகு ஒன்றரை வருடங்கள் கழித்து தான் குற்றமற்றவன் என்று விடுதலை செய்யப்பட்டதை அப்துல் கலீம் விவரித்துள்ளார். டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற ஆசைகளோடு சிரகடித்து பறந்து கொண்டிருந்த தன்னுடைய வாழ்க்கை எவ்வாறு திசை மாறிப் போனது என்று கண்ணீர் மல்க கூறியிருக்கிறார்.

மர்ம உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி நிர்வாணமாக ஐஸ் கட்டிகளில் படுக்க வைத்து தனக்கு இழைக்கப்பட்ட சித்ரவதைகளை அப்துல் கலீம் விவரித்த போது கண்கலங்கிப் போனார் அசிமானந்தா. இந்த இளைஙனைப் போன்று பலரின் வாழ்க்கை நிர்மூலமாவதற்கு தானும் ஒரு காரணம் என்பதை நினைத்து வெட்கி வேதனைப்பட்டு தனது தவறுக்கு பிராயச்சித்தமாக கோர்ட்டில் அனைத்து உண்மைகளையும் போட்டு உடைத்திருக்கிறார் அசிமானந்தா.

இனி பிரவீன் சுவாமியின் மேட்டருக்கு வருவோம்......

'ரிப்போர்டிங் என்னும் செய்திகளைக் கொடுப்பதில் பிரவீன் சுவாமி ஒரு பொழுதும் நெறிமுறைகளைக் கடைபிடிப்பது கிடையாது' என்று டெல்லியை மையமாகக் கொண்டு புலனாய்வு ஆவணப்படங்களைத் தயாரிப்பவரும், குஜராத் இனப்படுகொலைகளைப் பற்றிய ஆவணப் படத்தைத் தயாரித்தவருமான சுப்ரதீப் சக்ரவர்த்தி கூறுகிறார். 'பிரவீன் கூறும் செய்திகளுக்கு அவர் ஒரு பொழுதும் ஆதாரங்களைக் குறிப்பிட மாட்டார். புலனாய்வுத் துறையினர் இப்படி நம்புகிறார்கள் என்பதுதான் அவரின் முக்கிய ஆதாரமாக இருக்கும்' என்கிறார் சக்ரவர்த்தி.

இஸலாமிய பயங்கர வாதத்தைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதத் தயாராகும் இந்தப் பத்திரிக்கையாளர்கள் ஹிந்துத்வ பயங்கர வாதம் குறித்தும் ஆய்வு செய்வதற்கோ எழுதுவதற்கோ எந்த ஆர்வமும் காட்டுவதில்லை.

பிரவீன் சுவாமியைப் போன்று நாக்கிலும் தங்களின் எழுத்திலும் விஷத்தைக் கக்கி இந்தியர்களின் ரத்தத்தில் தங்கள் உடம்பை வளர்த்து வரும் கருங்காலிகளை இனம் கண்டு ஒதுக்கினாலே இந்தியா தலைநிமிரும். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை.

இவர்கள் ஏன் முஸ்லிம்களை மட்டும் குறி வைக்கிறார்கள் என்பது நடுநிலையாளர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இன்று இந்தியாவில் வர்ணாசிரிமத்துக்கு பெரும் சவாலாக இருப்பது இஸ்லாமே! யூதர்களுக்கு பெரும் சவாலாக இருப்பதும் இஸ்லாமே! ஏனெனில் கிறித்தவமும் அதன் பொலிவை இழந்து வெகு நாட்களாகிறது. புத்த மதத்தையும் ஓரம் கட்டியாகி விட்டது, பூர்வீக மார்க்கமான சமணத்தையும் துடைத்தெறிந்தாகி விட்டது. இஸ்லாத்தையும் அதே போன்று ஒரு வழி பண்ணி விட்டால் வர்ணாசிரமத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்று நினைத்து இவர்கள் காய்களை நகர்த்துகின்றார்கள். இவர்களின் இந்த திட்டம் 10 சதவீதம் கூட வெற்றி பெறப் போவதில்லை. ஏனெனில் பெரும் பெரும் வல்லரசுகளையே மண்டியிட வைத்த இஸ்லாம் அசிமானந்தாவைப் போல் தவறை உணர்ந்து இஸ்லாத்தை அரவணைக்கும் காலம் வரும். அதுவரை பொறுப்போம்.

சமீபத்தில் நண்பர் சார்வாகன் இந்தியாவின் ஆட்சி இந்துத்வாவின் ஆட்சியாக மலர பலர் தற்போது ஆசைப்படுவதாக தனது பதிவில் கூறியிருந்தார். தாராளமாக வரட்டும். இந்துத்வா ஆட்சி வந்தால் வர்ணாசிரமம் தலை தூக்கும். சாதிக் கொடுமைகள் மீண்டும் தலை எடுக்கும். தற்போது முன்னேற்றத்தில் செல்லும் நமது நாடு பின்னோக்கி செல்லத் தொடங்கும். இந்த அநியாயங்களை எல்லாம் பார்த்து இந்துத்வ வாதிகளே நடுநிலையாளர்களாக அசிமானந்தாவைப் போல் மாற வாய்ப்பு உண்டு. எனவே சார்வாகன் இனி இந்துத்வாவை வளர்க்க தாராளமாக பாடுபடலாம். வாழ்த்துக்கள்

thanks : இன்று ஒரு தகவல்

கருத்துகள் இல்லை: