ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

மனிதவுரிமை ஆர்வலர் டாக்டர் பினாயக்சென் விடுதலை!!

புதுடெல்லி: பிரபல மனித உரிமை ஆர்வலரும், மருத்துவருமான பினாயக்சென்னிற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.

முதல் நோக்கின் அடிப்படையில்(prima facie) தேசத்துரோக குற்றம் சுமத்த முடியாது என சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் சென்னிற்கு நிபந்தனையற்ற ஜாமீனை அனுமதித்துள்ளது.

நீதிபதிகள் ஹெச்.எஸ்.பேடி, சி.கே.பிரசாத் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் பினாயக் சென்னின் ஜாமீன் மனுவை பரிசீலித்தது.

மாவோயிஸ்டுகளுக்கு உதவினார் எனக் குற்றஞ்சாட்டி சட்டீஷ்கர் நீதிமன்றம் பினாயக் சென்னிற்கு ஆயுள்தண்டனை விதித்திருந்தது. கடந்த சில வருடங்களாக பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

பினாயக் சென் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சட்டீஷ்கர் மாநில விசாரணை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தள்ளுபடிச் செய்தன.

பினாயக் சென்னின் வீட்டிலிருந்து கைப்பற்றிய மாவோயிஸ்டுகளின் பிரசுரங்களின் அடிப்படையில் சட்டீஷ்கர் நீதிமன்றம் அவர் மீது நடவடிக்கை மேற்கொண்டது.

ஆனால், இத்தகைய பிரசுரங்கள் கண்டெடுத்ததால் மட்டும் ஒருவர் மீது தேசத்துரோக குற்றத்தை சுமத்தமுடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

பினாயக் சென்னிற்கு எதிராக கூடுதல் ஆதாரங்கள் இருந்தால் அதனை தாக்கல் செய்யுமாறு உச்சநீதிமன்றம் சட்டீஷ்கர் அரசிடம் கோரியது.

அதேவேளையில் பினாயக் சென்னிற்கு ஜாமீன் வழங்கினால் சட்டீஷ்கர் மாநிலத்தில் பிரவேசிக்கக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கவேண்டுமென கோரிய சட்டீஷ்கர் அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம் இத்தகைய கோரிக்கைகளை விசாரணை நீதிமன்றத்தில் எழுப்பவேண்டும் என உத்தரவிட்டது.