யாகூப் மேமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
யாகூப் மேமன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன?



தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமன் கடந்த 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அதே தினத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் நல்லடக்கம் நடைபெற்றது.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் கலாமின் நல்லடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதைக் காண ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் யாகூப் மேமன் உடல் நல்லடக்கத்தின்போது ஊடகங் களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதற்கு ஊடகங்களும் கட்டுப் பட்டு செயல்பட்டன. இரு காரணங் களுக்காக ஊடகங்களும் யாகூப் மேமன் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டன.
முக்கியமாக அந்த இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொள்ளாமல் கட்டுப்படுத்தி வன்முறை ஏற்படாமல் தடுப்பதும் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவரின் மீது தேவையற்ற அனுதாபம் ஏற்படுவதை தடுப்பதுமே ஆகும். மும்பையில் உள்ள சில டி.வி. சேனல்கள் இதுபோன்ற மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்துவிட்டன. எனினும் அடுத்த நாளில் நாளிதழ்களில் வந்த புகைப்படங்கள், செய்திகள் மூலம் யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் தெரியவந்தது. யாகூப் மேமன் நமாஸில் 8 ஆயிரம் முஸ்லிம்கள் பங்கேற்றதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இவ்வளவு பேர் ஏன் வந்தார்கள் என்ற கேள்வி இப்போது முக்கியமாக எழுகிறது.
இதுபற்றி பாஜக மூத்த தலைவரும் திரிபுரா ஆளுநருமான தத்தகதா ராய் ட்விட்டரில் ஒரு கருத்து தெரித்தார். அதில் யாகூப் மேமனின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தவிர மற்றவர்களில் பெரும்பாலானோர் தீவிரவாதிகளாக இருப்பார்கள். எனவே இதில் உளவுத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இவ்வளவு பேர் யாகூப் இறுதிச் சடங்கில் குவிந்ததற்கு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் பரவிய தகவலும் முக்கிய காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவை தவிர யாகூப் தூக்கி லிடப்பட்டதை தொடர்புபடுத்தி வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய தகவல்கள் பரவியதாகவும், அது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. யாகூப் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் எவ்வித கோஷங்களும் எழுப்பக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்தனர். அதனால் பிரச்சினை ஏதும் இன்றி இறுதிச் சடங்கு முடிந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்படி இருக்கும்போது ஏன் இவ்வளவு போலீஸ் கெடுபிடி என்பது அடுத்து எழும் கேள்வி.
1993-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளியான யாகூப் இப்போது தூக்கிலிடப்பட்டுள்ளார். அதே ஆண்டு ஜனவரியில் மும்பையில் நடைபெற்ற கலவரத்தில் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும், 200-க் கும் மேற்பட்ட இந்துக்களும் உயிரிழந்துள்ளனர். அதற்கு ஒரு மாதம் முன்புதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
எனவே மும்பை தொடர் குண்டு வெடிப்பு என்பது வேறு பல்வேறு தொடர் சம்பவங்களுடன் தொடர்புள்ளது. இந்த சம்பவங் களில் இறந்தவர்கள் ஒருபுறம் என்றால் தொழிலை இழந்தவர்கள், காயமடைந்தவர்கள், பலாத் காரத்துக்கு உள்ளான பெண்கள், வாழ்ந்து வந்த இடத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள், வாழ் வாதாரத்தை இழந்தவர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இது தான் குண்டுவெடிப்புகளுக்கு பின்னணி.
யாகூப் தூக்குக்கு முன்பாகவும் பல சர்ச்சைகள் எழுந்தன. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவரை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டுமென்று டி.வி. சேனல்களில் பல விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனிடையே, இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவர்களில் 94 சதவீதம் பேர் முஸ்லிம் மற்றும் தலித்துகள் என்று தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரத்தை தந்தது ஒரு பத்திரிகை. இது தாம் பின்பற்றும் மதம் காரணமாகவே தாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என முஸ்லிம்கள் மனதில் உள்ள கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
பாஜக சார்ந்த மாயா கோத்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியோர் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர் என்றும் ஒருசாரார் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் தீவிரவாதம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகளுக்கு வாசகர்கள்தரும் விமர்சனத்தை படிக்கும்போது. பல இடங்களில் முஸ்லிம்கள் என்றால் நம்பத்தக்கவர்கள் அல்ல என்ற கருத்தே உள்ளது. இதனால் முஸ்லிம்களுக்கு வேலை தேடுவதில் இருந்து வீடு கிடைப்பது வரை பிரச்சினை ஏற்படுகிறது.இதுதான் இந்தியாவில் முஸ்லிம்களாக உள்ளவர்களின் உண்மை நிலை.
யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் கூடியவர்கள் அனைவரும் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்பதாலோ அல்லது, வன்முறையில் ஈடுபடவோ வரவில்லை. தாங்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அனுதாபம் தெரிவிக்க வந்தவர்கள்.

thaks : 
http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article7489835.ece?homepage=true

வியாழன், 30 ஜூலை, 2015

டைகர்கள் உலகில் யாகூப்கள் பலிகடாக்கள்




யாகூப் மேமன் தனது கர்ப்பிணி மனைவி ராஹினைக் கராச்சியில் விட்டுவிட்டு காத்மாண்டுவில் இருக்கும் திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் ஜூலை 1994-ல் சரணடைந்தார். ராஹினுக்கு துபாயில் குழந்தை பிறந்தது. தானும் குழந்தையும் யாகூபுடன் மறுபடியும் சேர்ந்து புதுடெல்லியில் புதுவாழ்க்கை தொடங்கலாம் என்ற நம்பிக்கையில் இருந்தார் அவர்.


“நான் மனசாட்சி உள்ள மனிதன். டைகரின் தவறான செயல்களிலிருந்து என்னைத் துண்டித்துக்கொள்ள விரும்பினேன்” என்றார் யாகூப் மேமன். அது 1998-ல் நடந்தது. அப்போது நான் மும்பையில் பத்திரிகையாளராகப் பணியாற்றிக்கொண்டிருந்தேன். ‘பிளாக் ஃபிரைடே’ என்ற எனது புத்தகத்துக்காக ஆய்வு மேற்கொண்டிருந்தேன். யாகூபைச் சந்தித்தபோது, தனது கதையைப் பகிர்ந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். ஆனால், விசாரணை முடிவதற்கு முன் அந்தக் கதையை நான் எழுதப்போய், அதனால் இந்த வழக்குக்கு ஏதாவது குந்தகம் ஏற்படுமோ என்று அவர் பயந்தார். அவ்வப்போது தெளிவற்ற சில தகவல்களை உதிர்ப்பார். அவற்றை நான் பின்தொடர்ந்து சென்றால், மிகவும் முக்கியமான தகவல்களாக அவை இருக்கும்.
புத்திசாலித்தனமான, மனசாட்சியுள்ள மனிதர் யாகூப். சார்ட்டர்டு அக்கவுன்ட்டன்டாக இருந்திருக்கிறார். இந்து மதத்தவரான தனது பங்குதாரர் சேத்தன் மேத்தாவுடன் இணைந்து வெற்றிகரமான நிறுவனம் ஒன்றை நடத்திவந்தார். சிபிஐ-க்கு யாகூப் அளித்த வாக்குமூலத்தின்படி, மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றி அவர் முதன்முதலில் கேள்விப்பட்டது, துபாயில் இருந்தபோது 1993 மார்ச் 13 அன்று மாலை 4 மணிக்கு பிபிசி செய்திகள் மூலமாகத்தான்.
பாகிஸ்தானில் சிறைவைப்பு
துபாயில் இருந்த ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் குண்டுவெடிப்புகளைப் பற்றிக் கேள்விப்பட்டு அதிர்ந்துபோனார்கள். டைகர் மேமன் மட்டும் விதிவிலக்கு. அவர் அந்தக் குண்டுவெடிப்புகளைக் கொண்டாட விரும்பினார். துபாய் அரசு அந்தக் குடும்பத்தினரை அவசர அவசரமாக இந்தியாவுக்கு அனுப்பிவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டியிருந்திருக்கிறது. அங்கே அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளை டைகர் செய்திருந்தார். கராச்சியில் வெவ்வேறு மாளிகைகள், ராணுவக் குடியிருப்புகள் என்று அவர்கள் மாற்றப்பட்டுக்கொண்டேயிருந்தார்கள். எனினும், டைகர் மேமனையும் அயூப் மேமனையும் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பத்தினருக்கும் இப்படிச் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்துத் துளியும் விருப்பமில்லை. அவர்கள் தாய்நாடு திரும்புவதற்கு ஏங்கிக்கொண்டிருந்தார்கள்.
யாகூப் ஒன்றும் துணிச்சல் மிக்கவர் அல்ல. ஆனால், ஒரு நொடியில் ஏற்படும் துணிவுதான், துணிச்சலான நபரையும் கோழையையும் வேறுபடுத்துகிறது. தனது கொடிய சகோதரனையும் ஐஎஸ்ஐயையும் மீறிக்கொண்டு, எல்லாவற்றையும் எதிர்கொண்டு இந்தியா திரும்புவதென்ற முடிவை அவர் தீர்க்கமாக எடுத்தார். மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய ஐஎஸ்ஐயின் முக்கியப் புள்ளியான தௌஃபிக் ஜாலியாவாலாவுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட ஆரம்பித்தார். ரகசிய இடங்களை வீடியோ எடுத்துக்கொண்டார்; புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்; உரையாடல்களையெல்லாம் பதிவு செய்துகொண்டார். பிறகு, போலி பாஸ்போர்ட்டுகள், பாகிஸ்தான் அரசு வழங்கியிருந்த வெவ்வேறு அடையாள அட்டைகள் போன்ற ஆவண ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டார்.
தனது பயணப்பெட்டி முழுவதும் ஆதாரங்கள் நிரம்பியதும், காராச்சி-காத்மாண்டு-துபாய்-காத்மாண்டு-கராச்சி என்று சுற்றுவழி பயணச்சீட்டை லூஃப்தான்ஸா விமானத்தில் எடுத்துக்கொண்டார். அவர் திரும்பிவருவார் என்ற உறுதியில் ஐஎஸ்ஐ ஆட்கள் அவரது பயணத்துக்கு முட்டுக்கட்டை போட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இப்படி ஒரு ஏற்பாடு. இந்தியாவுக்கு நேரடியாகப் போக முடியாதென்பது யாகூபுக்குத் தெரியும். பாகிஸ்தான் அதிகாரிகளும் துபாய் அதிகாரிகளும் கூட்டாளிகள் என்பதால், துபாயில் சரணடைவது என்பது மிகவும் ஆபத்தாக முடிந்துவிடும். நேபாளம் இந்தியாவுக்கு நெருக்கமான நாடு என்று அவர் நினைத்ததால் காத்மாண்டுவைத் தேர்ந்தெடுத்தார். நம்பகத்தன்மை கொண்ட ஒரு தவறை அவர் வேண்டுமென்றே செய்ய நினைத்தார்.
பாதுகாப்புப் பரிசோதனையின்போது யாகூப் தனது பெட்டியைத் திறப்பதற்காக வேண்டுமென்றே தடுமாறியபோது, நிறைய பாஸ்போர்ட்டுகள் பெட்டியிலிருந்து சிதறிக் கீழே விழுந்தன. அதிகாரிகள் பிடித்தார்கள். யூசுஃப் அஹமத் என்ற பெயரில் சென்றிருந்த அவர் தனது உண்மையான பெயர் யாகூப் மேமன் என்ற உண்மையை, தான் பிடிபட்ட உடனேயே வெளிப்படுத்தினார். ரகசிய ஏற்பாட்டின்படி 48 மணி நேரத்துக்குள் அவர் இந்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டார். சிபிஐ தரப்பு கூறும் விளக்கம் சற்றே மாறுபடுகிறது. பாதுகாப்பு அதிகாரிகள் யாகூபின் பெட்டியில் துப்பாக்கி போன்ற ஏதோ ஒன்றைக் கண்டதாகவும் அதனால் பெட்டியைத் திறந்துகாட்ட அவர்கள் கேட்டதாகவும் அப்போதுதான் பாஸ்போர்ட்டுகள் சிதறி விழுந்தன என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
நேபாளத்தில் கைதுசெய்யப்பட்ட பிறகு, நேபாள எல்லைக்கு அருகே யாகூப் விடப்பட்டார். தனி விமானம் ஒன்றில் அங்கிருந்து புதுடெல்லி அழைத்துவரப்பட்டார். புதுடெல்லி ரயில் நிலையத்தில் அவர் கைதுசெய்யப்பட்டதாகச் சொல்லப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் ஏதும் தன் வாழ்க்கையில் நிகழவேயில்லை என்று தான் எழுதிய கடிதமொன்றில் யாகூப் தெரிவிக்கிறார்.
வெகு விரைவில் யாகூப் எல்லா இடங்களுக்கும் கொண்டுசெல்லப்பட்டுக் காட்சிக்கு வைக்கப்பட்டார். சில வாரங்களுக்குள், யாகூப் மேமனின் உதவியோடு, மேமன் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களையும் துபாயிலிருந்து இந்தியாவுக்கு வரச்செய்தது சிபிஐ. யாகூப் கைதுசெய்யப்பட்டதும் மேமன் குடும்பத்தினரின் மற்ற உறுப்பினர்கள் எல்லோரும் அவர்களுடைய முந்தைய திட்டத்தின்படி இந்தியாவுக்குத் திரும்பலாம் என்ற நம்பிக்கையில் துபாய்க்குச் சென்றிருந்தனர்.
பரபரப்பான ஒரு நடவடிக்கையின் மூலம் மேமன் குடும்பத்தினரை ஐஎஸ்ஐயின் கண்காணிப்பிலிருந்து சிபிஐ அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். பின்தொடரும் ஐஎஸ்ஐ ஆட்களை ஏமாற்றிவிட்டு, மேமன் குடும்பத்தினரில் எட்டுப் பேரை இந்தியாவுக்கு சிபிஐ அழைத்துவந்தது. எட்டு பாகிஸ்தான் பாஸ்போர்ட்டுகளில் சில நிமிடங்களுக்குள், அதுவும் விண்ணப்பதாரர்களைச் சந்திக்காமலேயே, இந்திய விசாக்களுக்கான முத்திரை இடப்பட்டது இந்திய வரலாற்றிலேயே இதுதான் ஒற்றை நிகழ்வாக இருக்கலாம். டைகர், அயூப், அவர்களின் மனைவியர் ஆகியோர் தவிர, ஒட்டுமொத்த மேமன் குடும்பமும் திரும்பிவந்துவிட்டார்கள். ஒரு மாதக் குழந்தை ஜுபைதாவைக் கைகளில் ஏந்திய ராஹினும் சில நாட்களுக்குப் பிறகு அவர்களோடு சேர்ந்துகொண்டார்.
மன்னிப்பு கிடைக்குமென்ற நம்பிக்கையில்
ஒட்டுமொத்த நடவடிக்கையும் சாத்தியமானது ஒரே ஒரு மனிதரின் அசாத்தியமான துணிவாலும் உறுதியாலும்தான்: அவர்தான் யாகூப் மேமன். கிட்டத்தட்ட சாத்தியமே இல்லாத இந்தப் பணியை நிறைவேற்றியதற்குப் பரிசாகத் தண்டனைக் குறைப்பும் மன்னிப்பும் கிடைக்கும் என்று யாகூப் எதிர்பார்த்தார். ஆனால், அரசு அவர் மீது தாக்குதல் நிகழ்த்த ஆரம்பித்தது. சிறையில் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். ‘என்கவுன்ட்டர்’ செய்யப்போகிறோம் என்று சொல்லி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கும்கூட ஒரு முறை அழைத்துப்போயிருக்கிறார்கள். ஆனால், தொலைக்காட்சியிலும், ஆரம்பத்தில் தன்னைக் கையாண்ட சிபிஐ அதிகாரிகளிடமும் சொல்லியவற்றைத் தவிர, சொல்வதற்கு யாகூபிடம் வேறு எதுவும் இல்லை.
தண்டனை நிறுத்திவைக்கப்படும் என்று அவர் எதிர்நோக்கிக்கொண்டிருந்தார். வாரங்கள் மாதங்களாகின, மாதங்கள் ஆண்டுகளாகின, ஆண்டுகள் தசாப்தங்களாகின. இப்போது அவர் தூக்கு மேடையில் நிற்கிறார். ஒட்டுமொத்த விசாரணையிலும் பெரிய இழப்பு யாகூபுக்கு என்பதுதான் இதில் முரண்பாடான விஷயம். இந்திய விசாரணை முகமைகளுக்கு ஏராளமான ஆதாரங்களை அவர் கொடுத்து உதவியிருக்கிறார். அதனாலேயே, இந்தத் திட்டத்தின் மூளை என்று கடைசியில் ஆக்கப்பட்டிருக்கிறார். ஒருமுறை டைகர் மேமனும் யாகூப் மேமனும் அனல்பறக்க விவாதித்தபோது, டைகர் மேமன் யாகூபிடம் சொல்லியிருக்கிறார், “காந்தியவாதியாக இந்தியாவுக்கு நீ போகிறாய், ஆனால் கோட்சேவாக நீ இந்தியாவில் தூக்கிலிடப் படுவாய்”. இதற்கு யாகூப் மேனன் இப்படிப் பதிலடி கொடுத்தார், “நீ சொன்னது தவறு என்பதைக் கடைசியில் நான் நிரூபிப்பேன்.”
இந்த உலகில் டைகர் மேமன்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடுவதும் யாகூப்களெல்லாம் தூக்கு மேடைக்கு அனுப்பப்படுவதும்தான் பெரும் துயரம்!
- எஸ். ஹுஸைன் ஜைதி, புலனாய்வுப் பத்திரிகையாளர், மும்பை தொடர் குண்டுவெடிப்புகளைப் பற்றிய ‘பிளாக் ஃபிரைடே’ புத்தகத்தின் ஆசிரியர்.
© ‘தி இந்து’ (ஆங்கிலம்),
சுருக்கமாகத் தமிழில்: ஆசை

thanks : http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7480529.ece?homepage=true