ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2015

இந்திய முஸ்லிம்களுக்கு உள்ள பிரச்சினைகள் என்ன?



தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமன் கடந்த 30-ம் தேதி நல்லடக்கம் செய்யப்பட்டார். அதே தினத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கும் நல்லடக்கம் நடைபெற்றது.
இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்னவென்றால் கலாமின் நல்லடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெற்றது. இதைக் காண ஊடகங்கள் அனுமதிக்கப்பட்டன. ஆனால் யாகூப் மேமன் உடல் நல்லடக்கத்தின்போது ஊடகங் களுக்கு அனுமதி தரப்படவில்லை. இதற்கு ஊடகங்களும் கட்டுப் பட்டு செயல்பட்டன. இரு காரணங் களுக்காக ஊடகங்களும் யாகூப் மேமன் தொடர்பான செய்திகளை வெளியிடுவதில் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டன.
முக்கியமாக அந்த இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொள்ளாமல் கட்டுப்படுத்தி வன்முறை ஏற்படாமல் தடுப்பதும் நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டவரின் மீது தேவையற்ற அனுதாபம் ஏற்படுவதை தடுப்பதுமே ஆகும். மும்பையில் உள்ள சில டி.வி. சேனல்கள் இதுபோன்ற மனதுக்கு பிடிக்காத நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்போவது இல்லை என்றும் தெரிவித்துவிட்டன. எனினும் அடுத்த நாளில் நாளிதழ்களில் வந்த புகைப்படங்கள், செய்திகள் மூலம் யாகூப் மேமன் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் எண்ணிக்கை குறித்த விவரம் தெரியவந்தது. யாகூப் மேமன் நமாஸில் 8 ஆயிரம் முஸ்லிம்கள் பங்கேற்றதாக ஒரு பத்திரிகையில் செய்தி வெளியானது. இவ்வளவு பேர் ஏன் வந்தார்கள் என்ற கேள்வி இப்போது முக்கியமாக எழுகிறது.
இதுபற்றி பாஜக மூத்த தலைவரும் திரிபுரா ஆளுநருமான தத்தகதா ராய் ட்விட்டரில் ஒரு கருத்து தெரித்தார். அதில் யாகூப் மேமனின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களை தவிர மற்றவர்களில் பெரும்பாலானோர் தீவிரவாதிகளாக இருப்பார்கள். எனவே இதில் உளவுத் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இவ்வளவு பேர் யாகூப் இறுதிச் சடங்கில் குவிந்ததற்கு வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்கள் மூலம் பரவிய தகவலும் முக்கிய காரணம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இவை தவிர யாகூப் தூக்கி லிடப்பட்டதை தொடர்புபடுத்தி வன்முறையைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய தகவல்கள் பரவியதாகவும், அது தொடர்பாக போலீஸார் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. யாகூப் இறுதிச் சடங்கு நடந்த இடத்தில் எவ்வித கோஷங்களும் எழுப்பக் கூடாது என்பது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை போலீஸார் விதித்தனர். அதனால் பிரச்சினை ஏதும் இன்றி இறுதிச் சடங்கு முடிந்ததாக போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்படி இருக்கும்போது ஏன் இவ்வளவு போலீஸ் கெடுபிடி என்பது அடுத்து எழும் கேள்வி.
1993-ம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவ குற்றவாளியான யாகூப் இப்போது தூக்கிலிடப்பட்டுள்ளார். அதே ஆண்டு ஜனவரியில் மும்பையில் நடைபெற்ற கலவரத்தில் 500-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும், 200-க் கும் மேற்பட்ட இந்துக்களும் உயிரிழந்துள்ளனர். அதற்கு ஒரு மாதம் முன்புதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
எனவே மும்பை தொடர் குண்டு வெடிப்பு என்பது வேறு பல்வேறு தொடர் சம்பவங்களுடன் தொடர்புள்ளது. இந்த சம்பவங் களில் இறந்தவர்கள் ஒருபுறம் என்றால் தொழிலை இழந்தவர்கள், காயமடைந்தவர்கள், பலாத் காரத்துக்கு உள்ளான பெண்கள், வாழ்ந்து வந்த இடத்தில் இருந்து துரத்தப்பட்டவர்கள், வாழ் வாதாரத்தை இழந்தவர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இது தான் குண்டுவெடிப்புகளுக்கு பின்னணி.
யாகூப் தூக்குக்கு முன்பாகவும் பல சர்ச்சைகள் எழுந்தன. அவர் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு அவரை கண்டிப்பாக தூக்கிலிட வேண்டுமென்று டி.வி. சேனல்களில் பல விவாத நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனிடையே, இந்தியாவில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவர்களில் 94 சதவீதம் பேர் முஸ்லிம் மற்றும் தலித்துகள் என்று தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் புள்ளி விவரத்தை தந்தது ஒரு பத்திரிகை. இது தாம் பின்பற்றும் மதம் காரணமாகவே தாங்கள் தண்டிக்கப்படுகிறோம் என முஸ்லிம்கள் மனதில் உள்ள கண்ணோட்டத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது.
பாஜக சார்ந்த மாயா கோத்னானி, பாபு பஜ்ரங்கி ஆகியோர் மீதும் கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால் அவர்கள் ஜாமீனில் வெளியே உள்ளனர் என்றும் ஒருசாரார் கேள்வி எழுப்பினர். இந்தியாவில் தீவிரவாதம் உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக இணையதளத்தில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகளுக்கு வாசகர்கள்தரும் விமர்சனத்தை படிக்கும்போது. பல இடங்களில் முஸ்லிம்கள் என்றால் நம்பத்தக்கவர்கள் அல்ல என்ற கருத்தே உள்ளது. இதனால் முஸ்லிம்களுக்கு வேலை தேடுவதில் இருந்து வீடு கிடைப்பது வரை பிரச்சினை ஏற்படுகிறது.இதுதான் இந்தியாவில் முஸ்லிம்களாக உள்ளவர்களின் உண்மை நிலை.
யாகூப் மேமன் இறுதிச் சடங்கில் கூடியவர்கள் அனைவரும் அவருக்கு அநீதி இழைக்கப்பட்டு விட்டது என்பதாலோ அல்லது, வன்முறையில் ஈடுபடவோ வரவில்லை. தாங்களும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் அனுதாபம் தெரிவிக்க வந்தவர்கள்.

thaks : 
http://tamil.thehindu.com/india/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9/article7489835.ece?homepage=true

கருத்துகள் இல்லை: