சனி, 4 ஆகஸ்ட், 2012

புனே குண்டுவெடிப்பு - ஹிந்துத்துவா தீவிரவாதிகளுக்கு தொடர்பா?


மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற சுசீல்குமார் ஷிண்டேயின் வருகைக்கு சற்று முன்பு புனேயில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஏழு நிமிடங்களுக்கு இடையே நான்கு இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதர 3 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட குண்டுகள் செயலிழக்கப்பட்டன.

பாலகந்தர்வா திரையரங்கு, ஜங்கிலி மகாராஜா சாலையில் (ஜே.எம். சாலை) உள்ள தேனா வங்கிக் கிளை, தக்காண சாலையில் உள்ள மெக்டொனால்ட் உணவகம் அருகிலிருக்கும் குப்பைத் தொட்டி, கார்வாரே பாலம் ஆகிய 4 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இதை தொடர்ந்து இந்தப் பகுதிகள் அனைத்தும் போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டன.

மகாராஷ்டிர மாநிலத்தின் தீவிரவாத எதிர்ப்புப் படை, வெடிகுண்டு சோதனைப் பிரிவு, குண்டுகளை செயலிழக்க வைக்கும் நிபுணர்கள் அடங்கிய குழு ஆகியன குண்டுவெடிப்பு நடந்த இடங்களுக்கு விரைந்தன. அந்தப் பகுதிகளில் இருந்த 6 குண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்டன.

கேக்குகளை வைக்கும் பெட்டியொன்றில் வெடிப்பொருள்களை வைத்து, காயமுற்ற நபர் எடுத்துச் சென்றுள்ளார். அந்தப் பெட்டியில் 2 டெட்டனேட்டர்கள், ஒரு பென்சில் செல் ஆகியன இருந்தன. இவற்றில் ஒரு டெட்டனேட்டர் குண்டு வெடிக்கப் பயன்பட்டுள்ளது. மற்றொன்று வெடிகுண்டு நிபுணர்களால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

முதல் குண்டு பாலகந்தர்வா திரையரங்கில் வெடித்தது. இங்குதான் குண்டு வைத்தவரே காயமுற்றார்.

இரண்டாவது குண்டு மெக்டொனால்ட் உணவகம் அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் வெடித்தது.

3வது மற்றும் 4வது குண்டுகள் கார்வாரே பாலத்திலும் தேனா வங்கி அருகிலும் வெடித்தன. இந்த 2 இடங்களிலும் ஒரு சைக்கிளில் கட்டப்பட்டிருந்த வாளியிலிருந்து குண்டுகள் வெடித்துள்ளன.

இந்த 4 இடங்களில் ஒரு இடத்தில் வெடிப்பொருள்கள் பாலிதீன் பைகளில் சுற்றப்பட்டுக் கிடந்தன. வெடிகுண்டுகளை எடுத்துச் சென்ற ஒருவர் காயமடைந்துள்ளார். அவரைப் பிடித்துள்ள போலீஸார், சசூன் மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்று மத்திய உள்துறைச் செயலர் ஆர்.கே. சிங் தெரிவித்தார்.

இந்தக் குண்டு வெடிப்பு சம்பவங்கள் திட்டமிட்ட தாக்குதல்களாகத் தெரிவதால், இதற்கு தீவிரவாத பின்னணி இருப்பதை மறுப்பதற்கில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வெடிக்குண்டு சம்பவம் குறித்து மஹராஷ்ட்ரா மாநில காவல்துறை தலைவர் சஞ்சீவ் தயாளிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, இப்போது இது பற்றி கருத்துக் கூறுவது பொருத்தமாக இருக்காது. காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் குண்டு வெடித்த இடங்களை அடைந்துவிட்டன. அவை குண்டு வெடிப்பு குறித்து அலசி வருகின்றன என்றார்.

புனே தொடர் குண்டுவெடிப்பு குறித்து புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே, இந்தச் சம்பவங்கள் இரவு 7.27 முதல் 8.15 மணிக்குள் நடந்ததாகவும்; இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய புலனாய்வு ஏஜென்சி குழுவும் தேசிய பாதுகாப்புப் படையினரின் வெடிகுண்டு செயலிழப்புக் குழுவும் புனேவுக்கு விரைந்துள்ளதாக ஷிண்டே தெரிவித்தார்.

மஹாராஷ்டிர உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீல் புனேயில் உள்ள நிலைமை குறித்து உள்துறையின் மூத்த அதிகாரிகளுடன் புதன்கிழமை இரவு அவசர ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், தங்கும் விடுதிகள், மார்க்கெட்டுகள், திரையரங்குகள் மற்றும் மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகள் அனைத்தும் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று மாநில உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

புனேயில் இப்போது நடந்துள்ளவை சிறிய அளவிலான குண்டுவெடிப்புகள்தான். எனவே, மக்கள் பீதியடையத் தேவையில்லை. காவல்துறையினர் உஷாராக உள்ளனர். அவர்கள் தங்கள் கடமையை ஆற்றி வருகின்றனர் என்று மாநில கூடுதல் காவல்துறை தலைவர் சத்யபால் சிங் தெரிவித்தார்.

குண்டு வெடிப்புச் சம்பவத்தை விஷமத்தனமான செயல் என்று புனே மாநகர காவல்துறை ஆணையர் குலாப் ராவ் போல் குறிப்பிட்டார்.

அதேவேளையில் 2006 ஆம் ஆண்டு மலேகானில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு மாதிரியில் புனே தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. மலேகானிலும் சைக்கிளில்தான் குண்டுவைக்கப்பட்டது. மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முதலில் சிமி இயக்கத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் ஹிந்துத்துவா தீவிரவாதி சுவாமி அஸிமானந்தா கைது செய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தைத் தொடர்ந்து சிமி உறுப்பினர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் போலீஸ் மற்றும் புலனாய்வு ஏஜன்சிகளின் விசாரணை ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் பக்கம் திரும்புமா? அல்லது வழக்கம் போல ஏதேனும் முஸ்லிம் இயக்கங்களின் தலையில் வைத்து கட்டப்படுமா என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும்.
 

கருத்துகள் இல்லை: