திங்கள், 14 மார்ச், 2011

கஷ்மீர்:ஷபீர் ஷாவின் நிகழ்ச்சியை சீர்குலைக்க முயற்சி - 25 சங்க்பரிவார் குண்டர்கள் கைது

கத்வா,மார்ச்.13:ஜம்மு கஷ்மீர் மாநிலம் கத்வா மாவட்டத்தில் டெமோக்ரேடிக் பீப்பிள்ஸ் ஃபாரம்(DPF) தலைவர் ஷபீர் ஷா ஏற்பாடுச் செய்த நிகழ்ச்சியை சீர்குலைக்க முயன்ற பா.ஜ.க, சிவசேனா, பஜ்ரங்தள் குண்டர்கள் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

DPF-இன் தலைவரான ஷபீர் ஷா க்ராண்ட் ப்ளாசா ஹோட்டலில் வைத்து கூட்டம் ஒன்றை நடத்தினார். ஷபீர் ஷா ஹோட்டலுக்கு வந்தவுடன் ஏற்கனவே அங்கு திரண்டிருந்த சங்க்பரிவார் குண்டர்கள் அவருக்கெதிராக கோஷமிட்டு நிகழ்ச்சியை தடுக்க முயன்றனர். ஆனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அவர்களை
தடுத்தனர்.

கஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை அரசு உருவாக்க வேண்டுமென ஷபீர் ஷா அக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ் ,

ஏழைகளை இழிவாகக் கருதாதீர்!




எம்.ஏ.முஹம்மது அலீ

[ ஒரு விஷயத்தை செல்வந்தர்கள் எண்ணிப்பார்த்தால் ஏழைகளின் மீது அவர்களுக்கு நிச்சயம் கருணை பிறக்கும். ஆம்! செல்வந்தர்களுக்கு ஏழை மிகப்பெரிய உதவியை செய்கிறார் என்பதை செல்வந்தர்கள் புரிந்து கொண்டார்களேயானால் அவர்களால் ஏழையை நேசிக்காமல் இருக்கவே முடியாது.

ஏழை என்று ஒரு சாரார் இருக்கப்போய்தான் செல்வந்தர்கள் தர்மம் எனும் மகத்துவமிக்க நற்செயலை செய்யும் பாக்கியத்தைப் பெறுகின்றனர். தர்மம் நரக நெருப்பை விட்டு மனிதர்களைக் காக்கிறது என்பதை கருத்தில் கொண்டுவந்தால் நரக நெருப்பை விட்டுமல்ல ஒருவரை சுகங்களை அள்ளித்தரும் சுவனத்திற்கு இட்டுச்செல்வவதற்கும் தர்மாம் காரணமாக அமைகிறகிறது என்பதை மறுக்க முடியாது.

அந்த தர்மத்தைச் செல்வந்தர்கள் செய்வதற்கு இந்த ஏழைகள்தானே காரணியாக இருக்கின்றார்கள். ஏழை என்று ஒரு சாரார் இல்லையெனில் செல்வந்தன் எவரிடம் கொண்டுபோய் கொடுக்க முடியும்.

ஏழை பணக்காரன் என்பதெல்லாம் இவ்வுலகைப்படைத்த அந்த ஏக வல்ல இறைவனின் ஏற்பாடு. எனவே ஏழைகள் செல்வந்தர்களைவிட தாழ்ந்தவர்களேயல்ல. இன்னும் சொல்லப்போனால் இவ்வுலகில் ஏழைகள் கஷ்டப்பட்டாலும் மறுமையில் கிடைக்கக்கூடிய இன்பங்களையும் சுகபோகங்களையும் செல்வந்தர்கள் அனுபவிப்பதற்கு முன்பே அதனை அடையக்கூடிய பாக்கியசாலிகள் என்றுகூட சொல்லலாம்.

நமது இந்திய நாட்டில் வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும் என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. தற்போது அந்த மார்ச் மாதத்தில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இந்த 40 கோடி ஏழை மக்களையும் இழிவானவர்களாகக் கருத முடியுமா என்ன?]

ஏழைகளை அவர்களின் ஏழ்மையின் காரணத்தால் இழிவாக, கேவலமாக பார்ப்பது கூடாது. ஏழைகள் உங்கள் வாசலுக்கு வந்து நின்றால் அவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பாதீர்கள். ஏழைகள், மிஸ்கீன்கள் அனாதைகளிடம் நேசத்துடன் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் மீது அன்பு காட்டுங்கள். இவைகளெல்லாம் இஸ்லாம் கற்றுத்தரும் மிக உண்ணதமான பாடமாகும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஏழைகளிடம் அன்பு பாராட்டக் கூடியவர்களாக இருந்தார்கள். தனது வீட்டில் சமைக்கப்படும் ரொட்டியை தனக்கில்லையெனிலும், யாசகம் கேட்பவருக்கு கொடுத்தவிட்டு, தான் பசியுடன் உறங்குவார்கள்.

மார்க்கப்பற்றுள்ள ஏழை உலகப்பார்வையில் கேவலமானவனாக இருந்தாலும் அல்லாஹ்வின் பார்வையில் கண்ணியமானவனாகும். செல்வந்தர்கள் ஏழைகளை உதாசினப்படுத்துகின்றனர். ஆனால் அந்த ஏழைகளின் ‘துஆ’க்(-பிரார்த்தனை)களை அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான் என்று அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவன்றுள்ளார்கள்.

‘தேவைகள் உடைய அதிகமான ஏழைகள்; இவர்களை செல்வந்தர்களின் வாசலில் இருந்து விரட்டப்படுகிறது. ஆனால் இவர்கள் இறைவனிடம் நேசத்திற்கு உரியவர்களாவார்கள். இவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் பிடிவாதமாக (இறைவனிடம் துஆ செய்து) அமர்ந்து விட்டால், அல்லாஹ் அவசியம் அதை நிறைவேற்றி வைக்கிறான்’ என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளியதாக ஹளரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (நூல்: திர்மிதீ)

எனவே ஒரு முஸ்லிம், ஏழை சகோதரனை கேவலமாக பார்க்காமல் இருப்பது அவசியமாகும். அவனை இழிவாக கருதவும் கூடாது. ஏனெனில் அவனின் அந்தஸ்து அல்லாஹ்விடம் எப்படி இருக்கிறது என்பது எவருக்கும் தெரியாது. வசதி படைத்தவர்கள் இழிவாக கருதுவதை சகித்துக் கொள்ளாமல் கவலையடைந்து, அவர்களுக்கு எதிராக பாதகமாக இறைவனிடம் கையேந்தி துஆ செய்து அதை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு விட்டால் நிலைமை மாறிவிடும். எனவே நம்மை பிறர் எவ்விதம் கண்ணியமாக பார்க்க வேண்டும் என எண்ணுகிறோமோ அவ்விதமே நாமும் அனைவரையும் கண்ணியக் கண்கொண்டு காண வேண்டும், அவன் ஏழையாக இருந்தாலும் செல்வந்தனாக இருந்தாலும் சரியே.

ஹளரத் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ‘நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ஆயிஷாவே! எனது வாசலுக்கு வரும் எந்த ஏழையையும் வெறுங்கையுடன் ஒருபோதும் திருப்பி அனுப்பிவிடாதே, பேரித்தங்கனியின் ஒரு துண்டையாவது கொடுத்துவிடு. ஆயிஷாவே! ஏழைகளிடம் அன்பு காட்டு, அவர்களை இழிவாகக் கருதாதே, ஏழைகள் செல்வந்தர்களை விட முதலில் சுவர்க்கத்தில் நுழைவார்கள்’. (நூல்: திர்மிதீ)

இந்த ஹதீஸின் மூலம்; பொருள், செல்வம் வந்துவிட்டது என்ற மமதையில் இறைவனை மறந்து வாழ்வது மிகப்பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். செல்வம் கிடைத்துவிட்டது என்பதால் ஏழை எளியவர்களை கேவலமாக, இழிவாக பார்ப்பதும் அவனை பெரும் சோதனையில் ஆக்கிவிடும். இந்த பொருளும், செல்வமும் இந்த உலகத்தோடு தங்கிவிடும். செல்வந்தனை விட ஏழை இறைவனுக்கு மிக நேசமானவனாக இருக்கிறான். எனவே செல்வந்தனை விட ஏழை சுவர்க்கத்திற்கு முந்திச் செல்வான்.

''திருமண - வலீமா விருந்திலேயே கெட்டவிருந்து செல்வந்தர்கள் அழைக்கப்பட்டு, ஏழைகள் விட்டு விடப்படும் விருந்தாகும்,'' என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.

ஒரு ஏழையின் வீட்டில் நிக்காஹ் நடப்பதாக வைத்துக் கொள்வோம். அவர், தன் பக்கத்து வீட்டிலுள்ள செல்வந்தர் ஒருவரையும் தன் வீட்டு திருமணத்தில் பங்கேற்று, விருந்துண்டு செல்லுமாறு அழைக்கிறார். அந்த செல்வந்தர், ""இது ஏழை வீட்டு கல்யாணம் தானே, அங்கே நாம் ஏன் செல்ல வேண்டும். அவர் கொடுக்கும் சாதாரண விருந்தில் என்ன இருந்து விடப்போகிறது. மேலும், அங்கு சென்றால், தனக்கு அவமானமல்லவா ஏற்படும் என நினைக்க கூடாது.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஒருமுறை ஏழை ஒருவர், ஆட்டுக்கால் குழம்பை கொடுத்தார். அதை அன்போடு ஏற்றுக் கொண்டார்கள். இதுபோல் செல்வந்தர்கள் வீட்டு விருந்துக்கும், ஏழைகள் அவசியம் அழைக்கப்பட வேண்டும்.

ஏழைகள் விடப்படும் வலிமா விருந்து கெட்ட விருந்து எனும்பொழுது அந்த விருந்து நல்ல விருந்தாக, இறையருள் பெற்ற விருந்தாக அமைய ஏழைகள் அவசியம் என்பதை செல்வந்தர்கள் உணரவேண்டும்.

ஒரு விஷயத்தை செல்வந்தர்கள் எண்ணிப்பார்த்தால் ஏழைகளின் மீது அவர்களுக்கு நிச்சயம் கருணை

பிறக்கும். ஆம்! செல்வந்தர்களுக்கு ஏழை மிகப்பெரிய உதவியை செய்கிறார் என்பதை செல்வந்தர்கள் புரிந்து கொண்டார்களேயானால் அவர்களால் ஏழையை நேசிக்காமல் இருக்கவே முடியாது.
ஏழை என்று ஒரு சாரார் இருக்கப்போய்தான் செல்வந்தர்கள் தர்மம் எனும் மகத்துவமிக்க நற்செயலை செய்யும் பாக்கியத்தைப் பெறுகின்றனர். தர்மம் நரக நெருப்பை விட்டு மனிதர்களைக் காக்கிறது என்பதை கருத்தில் கொண்டுவந்தால் நரக நெருப்பை விட்டுமல்ல ஒருவரை சுகங்களை அள்ளித்தரும் சுவனத்திற்கு இட்டுச்செல்வவதற்கும் தர்மம் காரணமாக அமைகிறகிறது என்பதை மறுக்க முடியாது.

அந்த தர்மத்தைச் செல்வந்தர்கள் செய்வதற்கு இந்த ஏழைகள்தானே காரணியாக இருக்கின்றார்கள். ஏழை என்று ஒரு சாரார் இல்லையெனில் செல்வந்தன் எவரிடம் கொண்டுபோய் கொடுக்க முடியும்.

ஆக, ஏழை பணக்காரன் என்பதெல்லாம் இவ்வுலகைப்படைத்த அந்த ஏக வல்ல இறைவனின் ஏற்பாடு. எனவே ஏழைகள் செல்வந்தர்களைவிட தாழ்ந்தவர்களேயல்ல. இன்னும் சொல்லப்போனால் இவ்வுலகில் ஏழைகள் கஷ்டப்பட்டாலும் மறுமையில் கிடைக்கக்கூடிய இன்பங்களையும் சுகபோகங்களையும் செல்வந்தர்கள் அனுபவிப்பதற்கு முன்பே அதனை அடையக்கூடிய பாக்கியசாலிகள் என்பதை முன்னமேயே கண்டோம்.

அகிலத்தின் அருட்கொடையாக இறைவனால் அனுப்பப்பட்ட பெருமனார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஏழைகளை நேசிப்பதில் மிகச்சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்று நமக்கு வரலாறு பறைச்சாற்றுவதை மனதில் கொள்வோம். ஏழைகளை கேவலமாக எண்ணாமல் அவர்களை மதிப்போம்.

நமது இந்திய நாட்டில் வரும் 2011ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியாக அதிகரிக்கும் என்று சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு அறிவித்தது. தற்போது அந்த மார்ச் மாதத்தில் தான் நாம் இருந்து கொண்டிருக்கிறோம். இந்த 40 கோடி ஏழை மக்களையும் இழிவானவர்களாகக் கருத முடியுமா என்ன?

சிந்திப்போம் சீர்பெறுவோம்.

source : www.nidur.info

மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தமீமுன் அன்சாரி தூதிற்கு அளித்த சிறப்பு நேர்காணல்

மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் சகோதரர் தமீமுன் அன்சாரி அவர்கள் நமது தூது ஆன்லைனிற்கு அளித்த சிறப்புப் பேட்டி.

கேள்வி:மாற்று அரசியலுக்கான முன் முயற்சி என்ற அடிப்படையில் மனித நேய மக்கள் கட்சியை உருவாக்கியுள்ளீர்கள். உங்கள் கட்சியின் பொதுவான செயல்திட்டம் என்ன?

பதில்:மாற்று அரசியல் என்பது எல்லா வகையிலும் மாற்று அரசியல். அதாவது, ஆடம்பர அரசியல் நிறுத்தப்பட வேண்டும், கட்அவுட் கலாச்சாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் நாங்கள் மாற்று அரசியலுக்கான முக்கிய விஷயங்களாக வைக்கிறோம். இதுமட்டுமல்லாமல் எங்கள் கட்சியின் வேட்பாளர்களை கூட தகுதியின் அடிப்படையில் தீர்மானிக்கிறோம். குறைந்தது எங்கள் கட்சியில் மூன்று ஆண்டுகள் உறுப்பினர்களாக இருந்திருக்க வேண்டும். அவர்கள் சமுதாயத்திற்காக எத்தகைய தியாகங்களை செய்திருக்கிறார்கள் எத்தகைய போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள் போன்ற இந்த அளவுகோலின்படி நாங்கள் எங்கள் வேட்பாளர்களை தீர்மானிக்கிறோம்.


ஆனால் இன்றைய அரசியல் கட்சிகளெல்லாம் தங்கள் தொகுதிகளை பணக்கார வேட்பாளர்களுக்கு விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். பணமிருந்தால் ஒருவர் சட்டமன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ உறுப்பினராக செல்லமுடியும் என்ற நிலைமை இன்றைய இந்திய அரசியலில் இருக்கிறது.

கேள்வி:அ.இ.அ.தி.மு.க.விடம் கூட்டணி வைத்துள்ள நீங்கள் முஸ்லிம் சமூகம் சார்பாக என்னென்ன கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள்? அவற்றை நிறைவேற்றுவதாக அவர்கள் வாக்களித்துள்ளார்களா?

பதில்:அதாவது செல்வி.ஜெயலலிதா அவர்களை நாம் சந்தித்தபோது, முஸ்லிம்களின் இடஒதுக்கீடை 3.5% யிலிருந்து கூடுதலாக ஒதுக்கித் தரவேண்டும் என்ற ஒரு கோரிக்கையை நாங்கள் முன்வைத்திருக்கிறோம்.

இரண்டாவதாக உருது முஸ்லிம்களுடைய பல்வேறு பிரச்னைகளை நாங்கள் கோடிட்டுக் காட்டி, அந்த உருது மொழியை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம். அடுத்ததாக தமிழக அரசு கொண்டுவந்த திருமணப் பதிவுச்சட்டத்தில் பல விஷயங்கள் முஸ்லிம்களின் உள்விவகாரத்தில் தலையிடுகின்ற காரணத்தினால், அதையும் எதிர்காலத்தில் ஆட்சியமைக்கின்ற போது முஸ்லிம்களுடைய வேண்டுகோளுக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்திருக்கிறோம்.

கேள்வி:வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுடன் நீங்கள் கூட்டணி வைத்துள்ளீர்கள். இத்தேர்தலில் பெரும்பாலும் முஸ்லிம் வாக்காளர்கள்தாம் உங்களது இலக்கு. பொதுவாகவே அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் மீது தமிழக முஸ்லிம்களுக்கு வெறுப்பு உள்ளதே. காரணங்கள் உங்களுக்கு தெரிந்ததுதான். குஜராத் இனப்படுகொலை புகழ் மோடியை நேரில் சென்று வாழ்த்தியது, வீட்டிற்கு அழைத்து விருந்தளித்தது, முஸ்லிம்கள் ஏற்கனவே பல சலுகைகளை அனுபவிக்கிறார்கள், அவர்களுக்கு இடஒதுக்கீடு தேவையில்லை எனக் கூறியது, கோத்ரா ரெயில் எரிப்புக்கு சிறுபான்மை மக்கள் மீது பழி போட்டது, பாப்ரி மஸ்ஜித் இடிப்பு தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலில் கரசேவைக்கு அனுமதியளிக்கக் கோரியது உள்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. இரு திராவிடக் கட்சிகளுமே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தாலும்
கூட அ.இ.அ.தி.மு.க.விடம் கொஞ்சம் அதிகமாக ஹிந்துத்துவா சாயல் தென்படுகிறதே?

பதில்:செல்வி.ஜெயலலிதா அவர்களின் மீது கடந்த காலத்தில் நாங்கள் வைத்த எந்த விமர்சனத்தையும் வாபஸ் பெறவில்லை. அதே நேரம் ஜெயலலிதா அவர்களின் மீது எத்தகைய குற்றச்சாட்டை நீங்கள் அடுக்குகிறீர்களோ அதே குற்றச்சாட்டு கருணாநிதிக்கும் பொருந்தும். காங்கிரஸ் கட்சிக்கும் பொருந்தும். பாபர் மஸ்ஜித் விஷயத்தில். அவர்கள் வந்து அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்று ஜெயலலிதாவை வலியுறுத்தினார்கள். ஆனால் பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டுத்தான் அங்கே கோயில் கட்டவேண்டும் என்று சொன்னார்களா என்று கேட்டோமென்றால் அதற்கு ஜெயலலிதா மறுப்பு தெரிவிக்கிறார். நான் அப்படிச் சொல்லவேயில்லை. தேசிய ஒருமைப்பாடு கூட்டத்தில் பேசும் பொழுது அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படவேண்டும் என்பதை வலியுறுத்தினேன், பாபர் மசூதியை இடித்துவிட்டுத்தான் கட்டவேண்டும் என்று நான் எப்போதும் சொல்லவில்லை என்று ஜெயலலிதா தெளிவுபடுத்தியிருக்கிறார்.

இரண்டாவது விசயம் அவங்க வந்து மோடிக்கு விருந்து கொடுத்தாங்க, பா.ஜ.க அரசோடு உறவு வைத்தாங்க என்றெல்லாம் சொல்றீங்க, அது சம்மந்தமாக எங்களுடைய தாய்கழகம் தமுமுக எத்தகைய விமர்சனங்களை ஜெயலலிதா மீது முன் வைத்ததோ அந்த விமர்சனங்கள் இப்போதும் அப்படியே இருக்கின்றன. அதை நாங்கள் வாபஸ் பெறவில்லை.

ஆனால் கடந்த காலங்களில் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்ததில் கலைஞர்தான் முன்னின்றார். அதிகமாக 13 மாதங்கள்தான் ஜெயலலிதா கூட்டணி வைத்தார். ஆனால் கலைஞர் அவர்கள் ஏறத்தாழ முழுமையான காலங்களில் பா.ஜ.க.வுடைய கூட்டணியில் நீடித்து எல்லா பதவி சுகங்களையும் பெற்றிருக்கிறார் என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. ஜெயலலிதா விருந்து வைத்தது குற்றம் என்று சொன்னால், கலைஞர் கருணாநிதி அவர்கள் பா.ஜ.க.வோடு கூட்டணியில் இருந்த காலத்தில்தான் குஜராத்தில் 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆக, விருந்து வைத்தது ஒரு குற்றம் என்பதை விமர்சிக்கின்ற நேரத்தில், அதை மட்டுமே குற்றமாகப் பார்க்கக்கூடியவர்கள் ஏன் பா.ஜ.க.வின் கூட்டணியில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பங்காளியாக இருந்தபோது 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் கண்டிக்கவில்லை என்பதைப் பற்றி யாருமே பேசுவதில்லை.

கலவரம் பற்றி எரிந்த அந்த நேரத்தில் மத்திய கூட்டணியில் கலைஞரோடு பங்காளியாக இருந்த ராம் விலாஸ் பஸ்வான் தன்னுடைய மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு குஜராத் கலவரத்தைக் கண்டித்து கூட்டணியை முறித்துக்கொண்டு வெளியேறினார். ஏன் கலைஞர் அதைப் போன்று செய்யவில்லை? இப்போது ஜெயலலிதாவை குற்றம் சுமத்துபவர்கள் அதே குற்றச்சாட்டை ஏன் கலைஞர் மீது வைக்கவில்லை?

கேள்வி:இந்தியாவில் அதிகாரத்திலிருந்து வெளியே நின்றுக்கொண்டிருக்கும் நிலைமைதான் முஸ்லிம் சமூகத்திற்கு உள்ளது. ஆனால் முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் உருவாவதால் மனித வளம்,பொருளாதாரம், முயற்சிகள் எல்லாம் சிதறுவதற்கான வாய்ப்புள்ளதல்லவா? அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் பொது செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து அரசியல் களத்தில்
செயல்பட முடியாதா? அவ்வாறு உருவானால் உங்களுடைய பதில் எவ்வாறிருக்கும்?

பதில்:
பதில்:அதாவது ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். ஒரு கூட்டுக் குடும்பத்தை உங்களால் நடத்த முடிகிறதா? 25 நபர் கொண்ட கூட்டுக் குடும்பத்தை உங்களால் ஒன்றுபட்டு வழிநடத்த முடியவில்லை. 5000 முஸ்லிம்கள் உள்ள ஒரு ஊரில் ஒரு ஐக்கிய ஜமாஅத்தை நிறுவுவதற்கு அந்த முஸ்லிம்கள் கஷ்டப்படுறாங்க. இப்படிப்பட்ட ஒரு சூழலில் இன்றைக்கு 60 லட்சம் முஸ்லிம்கள் இருக்கக்கூடிய தமிழகத்தில் எல்லாரும் ஒரே நிலையில் இருக்கிறார்களா என்பது சாத்தியக் குறைவு.

ஆனால் எங்களுடைய கனவுத் திட்டம் ஒன்று இருக்கிறது. எல்லாரும் வெவ்வேறு அமைப்புகளை நடத்துவதில் தவறில்லை. ஒவ்வொரு அமைப்பும் ஒவ்வொரு பணிகளைச் செய்வதும் தவறில்லை. ஆனால் முஸ்லிம்களுக்கு மத்தியில் பொதுவான நிலைப்பாடுகளில் ஒரு கூட்டமைப்பு ஏற்பட வேண்டும் என்ற கனவுத் திட்டத்தில் எங்களுடைய தாய்கழகம் தமுமுக இருக்கிறது. அதை இன்றில்லாவிட்டால் என்றாவது ஒரு நாள் செயல்படுத்துவோம் என்ற நம்பிக்கையில் இருந்து கொண்டிருக்கின்றோம்.

கேள்வி:தமிழக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளை துவக்குவதற்கு முன்னால் ம.ம.க. எந்த முஸ்லிம் அமைப்புகளுடனோ, அரசியல் கட்சிகளுடனோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அதாவது ஒட்டுமொத்த முஸ்லிம் இயக்கங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் கூட்டணி முடிவாகி சீட் ஒதுக்கப்பட்ட பிறகு நீங்கள் ஆதரவு கேட்பதாகக் கூறப்படுவது பற்றி?

பதில்:இந்தக் குற்றச்சாட்டு எல்லா அமைப்புகளுக்கும் பொருந்தும், நாங்கள் தமிழகத்தில் இருக்கக்கின்ற முஸ்லிம் அமைப்புகளில் வலுவான ஒரு அமைப்பு என்பது சமுதாயம் ஏற்றுக்கொண்ட உண்மை. அப்படி இருக்கின்ற பொழுது எங்களுக்கு என்று ஒரு செயற்குழு இருக்கின்றது, ஒரு பொதுக்குழு இருக்கின்றது. அந்தச் செயற்குழுவும் பொதுக்குழுவும் எதைச் சொல்கிறதோ அதைத்தான் எங்களுடைய உயர்நிலைக்குழு தீர்மானிக்கும். அந்த அடிப்படையில் தொகுதிப் பேச்சுவார்த்தையை நாங்கள் சென்று நடத்துறோம்.

எல்லாரையும் அழைத்துக்கொண்டு ஏன் போகவில்லை என்று சொன்னால், நடைமுறையில் சாத்தியமில்லை. எல்லோரும் என்ன சொல்றாங்க என்று சொன்னால் நான் உம்மி கொண்டு வரேன், நீ அரிசி கொண்டுவா என்கிறார்கள். பத்து அமைப்புகள் சேர்ந்து போகும்போது பத்து அமைப்புகளுக்கும் என்ன பின்னணி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.

கேள்வி:அரசியலுக்கு அப்பாற்பட்டு சமுதாய இயக்கங்களை ஒற்றுமைப்படுத்த நடந்த முயற்சிகள் பற்றி?

பதில்:திருவளச்சேரியில் கடந்த ரமலானில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 2 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட அந்த நேரத்தில், தமிழகத்தில் 19 இயக்கங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியதில் தாய்க் கழகமான தமுமுகவுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. இந்த அடிப்படையில் குஜராத் கலவரம் நடந்த நேரத்தில்கூட தமுமுகவும் மற்ற அமைப்புகளுடன் சேர்ந்து முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்பாடு செய்து பல கண்டனத் தீர்மானங்களை நிறைவேற்றினோம். கண்டன மாநாடுகளையும், பொதுக் கூட்டங்களையும் நடத்துவதற்கு காரணமாக இருந்தோம்.

நான் ஏற்கனவே சொன்னது போல் அரசியல் நிலைப்பாட்டுக்கு அப்பாற்பட்டு சமுதாய அமைப்புகளுக்கு மத்தியில் ஒரு கலந்தாய்வு அடிக்கடி நடத்தப்பட வேண்டும், ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற ஒரு ஆர்வம் எங்களுக்கு இருக்கிறது. எதிர்வரும் காலங்களில் நிச்சயமாக அதை செயல்படுத்துவோம்.

கேள்வி:தமிழக முஸ்லிம்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று 3.5
சதவீதம் இடஒதுக்கீட்டை கலைஞர் கருணாநிதி அரசு வழங்கியுள்ளது. இதற்காக நீங்கள் நன்றி தெரிவித்து பாராட்டு விழா கூட நடத்தியுள்ளீர்கள். இதனை ஒரு சாதனையாக கலைஞர் கருணாநிதி அவர்கள் முஸ்லிம் சமூகத்திடம் பிரச்சாரம் செய்யும் பொழுது உங்களுக்கு பாதிப்பு வராதா?


பதில்:நிச்சயமாக பாதிப்பு ஏற்படுத்தாது. ஏனெனில் கலைஞர் விரும்பி அவராக இடஒதுக்கீடு கொடுக்கவில்லை. கேரளாவில் முஸ்லிம்கள் தானாக இடஒதுக்கீடு பெற்றார்கள், கர்நாடகாவில் தானாக இடஒதுக்கீடு பெற்றார்கள், ஆனால் தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் நெடிய போராட்டங்களை நடத்தியது, நம்மைப் போன்ற வேறு சில சமுதாய அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திய பிறகு, போராட்டத்தின் நெருக்கடி தாங்காமல்தான் கலைஞர் இடஒதுக்கீடு தந்தார் என்பது உண்மை. குறிப்பாக 2007ம் வருடம் ஆகஸ்ட் மாதம் நாங்கள் தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் ராஜகிரி தாவூத் பாஷா அவர்களின் கல்லூரியில் மாநிலப் பொதுக்குழுவை நடத்தினோம். அந்த பொதுக் குழுவில் திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தபோது இறுதி எச்சரிக்கை கலைஞருக்கு விடுத்தோம். 2007 டிசம்பர் 31க்குள் நீங்கள் இடஒதுக்கீடு தரவில்லை என்று சொன்னால், டாக்டர் ராமதாஸ் எத்தகைய வீரியமிக்க போராட்டங்களை களத்தில் எடுத்தாரோ அதை விட பன்மடங்கு வீரியமிக்க போராட்டங்களை நாங்கள் களத்தில் முன்னெடுப்போம், சாலைகளை மறிப்போம், ரயில்கள் ஓடாது, விமான நிலையங்களை முற்றுகை இடுவோம், கேபிள் வயர்களைக் கூட அறுப்போம் என்ற இறுதி எச்சரிக்கையை அந்த பொதுக் குழுவில் விடுத்தோம். அந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட 15 நாட்களில்தான் கலைஞர் இடஒதுக்கீட்டை தந்தார் என்பதை இந்த நேரத்தில் நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஆக ஒரு பெரிய நெருக்கடியையும் நிர்ப்பந்தத்தையும் ஏற்படுத்திய பிறகுதான் கலைஞர் கொடுத்தாரே தவிர மனமுவந்து கொடுக்கவில்லை.

கேள்வி:வெளிநாடுவாழ் தமிழக தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசு நியமித்த ஆணையம் அமைக்கும் முயற்சியில் ஏதேனும் கோரிக்கை வைத்தீர்களா?

பதில்:ஏறத்தாழ கடந்த 10 வருடங்களாக எங்களுடைய மாநில பொதுக்குழுவில், செயற்குழுவில் இதனைத் தீர்மானமாக நிறைவேற்றி வருகிறோம். இன்ஷா அல்லாஹ் எழுதி வைத்துக்கொள்ளுங்கள், எங்களுடைய கூட்டணி வெற்றி பெறுகின்ற பொழுது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைக்கின்ற பொழுது, நிச்சயமாக மனிதநேய மக்கள் கட்சி இந்த வெளிநாட்டு தொழிலாளர்களுடைய வாரியத்தை தனி அமைச்சகமாக ஆக்கி, எப்படி மலையாளிகள் கேரளாவில் தனி அமைச்சகமாக வைத்திருக்கிறார்களோ அதேபோல் மாற்றி வெளிநாட்டுக்குச் செல்லக்கூடிய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை கம்பெனிகள் இங்கேயே நிர்ணயிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்குவதற்கு அதை சட்டமாக்குவதற்கு நாங்கள் முழுமையாக போராடுவோம்.

கேள்வி:ஒரு சமுதாய அமைப்பு தாங்கள் போட்டியிடும் தொகுதியில் மட்டும் எதிர்ப் பிரச்சாரம் செய்யப்போவதாகப் பற்றி?

பதில்:கலைஞர் கருணாநிதியாலும் நிராகரிக்கப்பட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் தங்களின் இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காக தாங்களும் அரசியல் களத்தில் உயிரோட்டமாக இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்திக் கொள்வதற்காக இத்தகைய முடிவுகளையெல்லாம் சொல்கிறார்கள். அவர்கள் ஏற்கனவே இந்தச் சமுதாயத்தால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். தொடந்து நிராகரிக்கப்படுவார்கள். அவர்களால் யாருக்கும் வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை என்பதை இன்ஷா அல்லாஹ் சட்டமன்றத் தேர்தலின் களம் நிரூபிக்கும்.

கேள்வி:எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுகிறீர்கள்? அதனை இறுதி செய்து விட்டீர்களா?

பதில்: 15 தொகுதிகளை அடையாளம் காட்டி அதிலிருந்து 3 தொகுதிகளை இறுதி செய்திருக்கிறோம். அந்த தொகுதிகள் எது என்பதை ஊடகங்களிடம் இப்போது பகிர்ந்து கொள்ளமுடியாத நிலையில் இருக்கின்றோம். நாங்கள் கேட்ட தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்ஷா அல்லாஹ் இருக்கிறது. விரைவில் அநேகமாக ஒரு வாரத்தில் அந்தச் செய்தி வெளிவரும்.

source :

ஞாயிறு, 13 மார்ச், 2011

பயணம் திரைப்படம் போதிக்கும் நீதி ...!

நன்றி :- சமரசம்

ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு

மும்பை,மார்ச்.12:மலேகான் குண்டுவெடிப்பு போன்ற நாட்டின் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மகாராஷ்டிரா மாநில உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பல்வேறு சட்ட விரோத தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் சனாதன் சன்ஸ்தாவை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தொடங்கி இருக்கிறது. இது தொடர்பான திட்டம் மத்திய அரசுக்கு விரைவில் அனுப்பப்படும் என்றார்.

கடந்த 2008ம் ஆண்டு, தானே மாவட்டத்தில் மராத்தி நாடகம் நடந்து கொண்டிருந்த தியேட்டரில் குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக சன்ஸ்தாவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அப்போதே இந்த அமைப்பை தடை செய்யும்படி மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படை கோரியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் பர்பானி, ஜல்னா, புர்னா, ஜல்காவ் ஆகிய இடங்களிலும் கோவா மற்றும் ராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் தர்காவிலும் நடந்த குண்டு வெடிப்புகளிலும் இந்த அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

2009ம் ஆண்டு மார்கோவாவில் தீபாவளி தினத்தில் நடந்த குண்டு வெடிப்பில் மூவர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் சன்ஸ்தாவை சேர்ந்த இருவருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

மகாராஷ்டிராவிலும் அண்டை மாநிலங்களிலும் உள்ள சில இந்து அமைப்புகள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வருவதை தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே அம்பலப்படுத்தினார்.

மேலும் அந்த அதிகாரி தெரிவிக்கையில் " 'சனாதன் பிரபாத்' என்ற பத்திரிகை ஒன்றை சனாதன் சன்ஸ்தா அமைப்பு நடத்தி வருகிறது. ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை பற்றி ஆத்திரமூட்டும் வகையிலான கட்டுரைகள் இந்த பத்திரிகையில் வெளியாகி வருகின்றன இதையும் அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது" என்றார்.
source :

சிறுபான்மையினரின் காவலனா தி.மு.க.?-சீறுகிறார் ஜவாஹிருல்லா -ஜீனியர் விகடனில் பிரசுரமான பேட்டி

ஜவாஹிருல்லா

'2009 மக்களவைத் தேர்தலில் தி.மு.க.அணியில், இரண்டு எம்.பி. ஸீட் தரவில்லை’ என த.மு.மு.க-வின் மனித நேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டனர். இந்த முறை அ.தி.மு.க. அணியில் மூன்று சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே பெற்று த.மு.மு.க-வின் 'ம.ம.க.’ போட்டியிடுகிறது. ஏன் இந்த மனமாற்றம்? தலைவர் ஜவாஹிருல்லாவிடம் கேட்டோம்.

''அ.தி.மு.க. அணியில் லட்சியம் 12, நிச்சயம் 6 பெறு​வோம் என சொன்னீர்கள். கடைசியில் மூன்று தொகுதிகள்தானே பெற முடிந்தது?''

''துடிப்புமிக்க, ஆற்றல்மிகு தொண்டர் பலம்​கொண்ட கட்சியான ம.ம.க-வுக்கு கூடுதல் இடம் பெற முயற்சித்தோம். கிடைக்கவில்லைதான். ஆனால், ஊழல் மலிந்த, மக்கள் விரோத தி.மு.க. ஆட்சியை அப்புறப்படுத்த, வலுவான கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அ.தி.மு.க. அணியில் இணைந்துள்ளோம். சிறுபான்மை அரசியலில் இது முக்கியமான சாதனையாகச் சொல்லலாம்.91-ம் ஆண்டுக்குப் பிறகு மூன்று தொகுதிகளுடன் தனிச் சின்னம் பெற்றுள்ளோம். 2001-ல் அ.தி.மு.க. அணியில் தேசிய லீக் லத்தீஃப் ஒரு தொகுதி பெற்று 'பஸ்’ சின்னத்தில் நின்றார். அதே அணியில், 2006-ல் இரண்டு இடங்கள். ஆனால், இரட்டை இலை சின்னம்தான். தி.மு.க. அணியிலோ முஸ்லிம் லீக்குக்கு இரண்டு இடங்கள், ஆனால் போட்டியிட்டது உதயசூரியன் சின்னத்தில்தான். எனவே, முதல் முறையாக தேர்தலைச் சந்திக்கும் ம.ம.க-வுக்கு, தனி சின்னத்தில் மூன்று தொகுதிகள் என்பது நல்ல நிலைதானே!''

''சிறுபான்மையினரின் பாதுகாவலன் என தி.மு.க-வைப்பற்றி சொல்லப்படுகிறதே?''

''இது ஒரு மாயை. முஸ்லிம்கள் தனி அரசியல் பலம் பெற்றுவிடாமல் தடுக்கும் பணியை தி.மு.க. நாசூக்காகவே செய்கிறது. அங்கு முஸ்லிம்கள் வஞ்சிக்கப்படுகின்றனர். சாதிக் பாட்சாவுக்குப் பிறகு, அங்கு தலைமை நிர்வாகிகளில் ஒருவர்கூட முஸ்லிம் இல்லை. வேலூர் முகமது சகியும், நீலகிரி முபாரக்கும் மாவட்டச் செயலாளர்களாக இருந்தார்கள். இப்போது, தி.மு.க-வில் ஒரு மாவட்டச் செயலாளர்கூட முஸ்லிம் இல்லை.

இன்னொன்று... முஸ்லிம் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் பகுதியில் அவர்களில் ஒருவரை மக்கள் பிரதிநிதி ஆக்காமல், 'அந்தப் பகுதி தி.மு.க. தலைவர்​களுக்குப் பாதுகாப்பானது’ என அந்தக் கட்சித் தலைவர்கள் பலரும் போட்டியிட்டு வெற்றி பெற்​றனர். சென்னை துறைமுகம் தொகுதியில் திருப்பூர் மொய்தீனுக்குப் பிறகு, செல்வராஜ் வந்தார். அடுத்து கலைஞரும், அன்பழகனும் போட்டி​யிட்டார்கள். சேப்பாக்கத்தில் லத்தீஃபுக்கு அடுத்து, ரகுமான்கானை தி.மு.க. நிறுத்தியிருக்க முடியும். ஆனால், கலைஞரே போட்டியிட்டு எளிதாக வென்றார். ரகுமான்கானோ, பூங்காநகர் தொகுதியில் தோல்வி அடைந்தார்.

சிறுபான்மைக் கட்சிகள் தனி அரசியல் அடையாளம் பெற்று​விடக் கூடாது என்பதில் தி.மு.க. கவனமாக இருக்கிறது. தங்களுடன் ஒரு பச்சைக் கொடி வேண்டும் என்பதற்காக, முஸ்லிம் லீக்கை சிறுபான்மை அணியைப்போல வைத்திருக்கிறார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில்கூட முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், 'காதர் மொய்தீனை ஏணிச் சின்னத்தில் நிறுத்துவது’ என அந்தக் கட்சியின் பொதுக் குழு முடிவு செய்தது. தி.மு.க. தலைமை இதில் தலையிட்டு, துபாயில் இருந்து அப்துர் ரஹ்மான் என்பவரை வேலூர் மக்களவைத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தினர். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க. அணியில் முஸ்லிம் லீக், உதயசூரியன் சின்னத்தில்தான் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டது. இப்போதும், தி.மு.க. அணியில் முஸ்லிம் லீக்குக்கு மூன்று இடங்கள், உதயசூரியன் சின்னம் என அறிவித்தார்கள். அந்த மூன்று இடங்கள்கூட கடைசியில் இரண்டாகிவிட்டது.''

''முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு பெற்றது தி.மு.க. ஆட்சியில்​​தானே... அது தவிர, காங்கிரஸ் கட்சியையும் எதிர்ப்பது ஏன்?''

''கேரளத்தில் 71-ம் ஆண்டிலேயே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வந்துவிட்டது. 67-ல் இருந்தே தி.மு.க-வுக்கு முஸ்லிம் மக்கள் ஆதரவு அளித்துவந்தனர். மறைந்த அப்துல் லத்தீஃப் 99-லேயே கருணாநிதியிடம் ஒரு சதவிகிதம் இடஒதுக்கீடு கேட்டார். ஆனால், அவர் தரவில்லை. 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து நாங்கள் போராடிய பிறகு, தேர்தல் ஆதாயம் கருதியே, தி.மு.க. ஆட்சி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது. அதைச் செயல்படுத்துவதில் பலவிதமான சிக்கல்கள். இதுபற்றி வெள்ளை அறிக்கை கேட்டோம். அதை வெளியிடுவதற்குத் தயங்குகிறார்கள்.

உருதுவைத் தாய்மொழியாகக்கொண்ட முஸ்லிம்கள் சமச்சீர் கல்வியால் பாதிக்கப்படுவதைத் தடுக்க, உரிய நேரத்தில் உரிய திருத்தம் செய்யப்படவில்லை. கட்டாய 'திருமணப் பதிவு’ச் சட்டத்தில்... பள்ளிவாசல், ஜமாத்துகள் பதிவுசெய்து தரும் ஆவணங்களை ஏற்பதாக சட்ட அமைச்சர் துரைமுருகன் உறுதி அளித்தார். ஆனால், இந்துக் கோயில்களில் வழங்கப்​படும் சான்றிதழ்களை மட்டும் ஏற்றுக்கொள்ள உத்தர​விட்டுவிட்டு, முஸ்லிம்களின் கோரிக்கையை நிறைவேற்றவே இல்லை.

மேலும், சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கு​மாறு நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா குழு 2007-ல் பரிந்துரைத்தது. இதுவரை, மத்திய காங்கிரஸ் - தி.மு.க. கூட்டணி அரசு அதைச் செயல்படுத்தவே இல்லை. தேர்தல் அறிக்கை​யில் இதைச் செயல்படுத்த நடவடிக்​கை எடுப்பதாக உறுதியளித்த தி.மு.க-வும், கண்டுகொள்ளவே இல்லை. மேலும், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற குண்டு​வெடிப்புகள் தொடர்பாக, ஆண்டுக்கணக்கில் சிறைவைக்கப்​பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்யவும் மத்திய, மாநில அரசுகள் மறுக்கின்றன. எனவே, சிறுபான்மையினரின் காவலன் தி.மு.க. என்பதை ஒப்புக்கொள்ள முடியாது.''

''பி.ஜே.பி-யுடன் கூட்டணிவைத்தது தவறு எனக் கூறிவிட்டு, பிறகு அந்தக் கட்சியுடன் கூட்டு சேர்ந்தவர் ஜெயலலிதா. அப்படிப்பட்டவருடன் சேர்ந்திருப்​பதன் மூலம் கொள்கையைவிட தேர்தல் ஆதாயம்தான் முக்கியம் என நீங்களும் மாறிவிட்டீர்களே?''

''99-ம் ஆண்டு சென்னைக் கடற்கரை சீரணி அரங்கில் த.மு.மு.க. நடத்திய முஸ்லிம்களின் வாழ்வுரிமை மாநாட்டில்தான், ஜெயலலிதா அம்மையார், 'பி.ஜே.பி-யுடன் இனி கூட்டணிவைக்க மாட்டேன்’ என உறுதிமொழி அளித்தார். ஆனால், 2004 மக்களவைத் தேர்தலில் அவர்​களோடு கூட்டணிவைத்தார். அது உண்மைதான். ஆனால் இன்று தி.மு.க. ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதில் ஒன்றாக நிற்கிறோம். அம்மையார் இனியும் பி.ஜே.பி-யுடன் கூட்டுவைக்க மாட்டார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது!''

நன்றி - ஜீனியர் விகடன் -16-மார்ச் -2011

சனி, 12 மார்ச், 2011

தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அ.தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது



(12 Mar) திருச்சி, மார்ச் 11: தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அ.தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது என்றார் த.மு.மு.க. மாநிலத் தலைவரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளருமான எம்.எச். ஜவாஹிருல்லா. திருச்சியில் வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி: மனிதநேய மக்கள் கட்சி முதன்முதலாக சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எங்கள் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 தொகுதிகளிலும் நாங்கள் தனி சின்னத்தில் போட்டியிடுவோம் என்ற கருத்துக்கு அ.தி.மு.க. எந்தவித ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை. இரட்டை மெழுகுவர்த்தி அல்லது தராசு சின்னத்தை தேர்தல் ஆணையம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளோம். தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் அனைத்து அம்சங்களிலும் மக்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. கடந்த ஐந்தாண்டுகளில் காவல் நிலையங்களில் சந்தேகத்துக்கிடமான முறையில் 46 பேர் இறந்துள்ளனர். மோதல் கொலைகள் மூலம் 30 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு ரூ.11,900 கோடி வீதம் கடந்த ஐந்தாண்டுகளில் ஏறத்தாழ ரூ.59,500 கோடி அளவுக்கு மணல் வளம் ஆளுங்கட்சியினரால் சுரண்டப்பட்டுள்ளது. மணல் அள்ளப்படுவதால் நீர்வளமும், நில வளமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இலவச கான்கிரீட் வீடு வழங்கும் திட்டம் மக்களை வஞ்சிக்கும் திட்டமாக உள்ளது. இந்தத் திட்டத்தில் வீடு கிடைக்கும் என நினைத்தவர்கள் தற்போது தங்களது வீடுகளை இழந்து நிற்கின்றனர். கடந்த ஐந்தாண்டுகளாக மக்களை வஞ்சித்து வரும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வல்லமை அ.தி.மு.க. கூட்டணிக்கு உள்ளது என்றார் அவர்.
source : http://newshunt.com/share?id=8411446