புதன், 3 ஏப்ரல், 2013

விசாரணை கைதிகளாக சிறையில் வாடுபவர்களை மீட்க புதிய அமைப்பு : மார்கண்டேய கட்ஜு தொடங்கினார்


புதுடெல்லி, ஏப். 3-

சந்தேகத்தின் பேரில் நீண்ட நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை சட்டரீதியாக மீட்க இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு புதிய அமைப்பை தொடங்கியுள்ளார்.

இதுதொடர்பாக புதுடெல்லியில் பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

சந்தேகத்தின் அடிப்படையிலும் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் குற்றவாளியாக இருந்தால், அந்த சமுதாயத்தில் உள்ள அனைவருமே குற்றவாளிகள்தான் என்ற எண்ணத்தில் இன்று சிறுபாண்மையினர் பலர் விசாரணை கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

குண்டு வெடிப்பு உள்ளிட்ட தீவிரவாத செயல்கள் எப்போது நிகழ்ந்தாலும் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசாரால் முடிவதில்லை. உடனடியாக சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் கைது செய்து அவர்களை சிறைகளில் அடைக்கின்றனர்.

இப்படி ஆண்டு கணக்கில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டிருப்பவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யவும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்க்கவும் 'கடைசி சேர்விடத்திற்கான நீதி மன்றம்' (தி கோர்ட் ஆப் லாஸ்ட் ரிசல்ட்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பில் பிரபல வழக்கறிஞர் மஜீத் மேமன், பாலிவுட் தயாரிப்பாளர் மகேஷ் பட் உள்பட பலர் என்னுடன் சேர்ந்து பணியாற்றுவார்கள்.

1948-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கிரிமினல் வழக்கறிஞர் எர்ல் ஸ்டாண்லி கார்ட்னர் என்பவர் ஏற்படுத்திய அமைப்பு இந்த அமைப்பை உருவாக்கும் ஊக்கத்தை அளித்தது.

தவறே செய்யாமல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் நபர்களின் தண்டனையை ரத்து செய்யும்படி ஜனாதிபதி, மாநில ஆளுநர்கள் ஆகியோரிடம் முறையீடு செய்து கைதிகளை விடுதலை செய்ய தேவையான அனைத்தையும் எங்கள் அமைப்பின் மூலம் செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி :  http://www.maalaimalar.com/2013/04/03043026/Katju-launched-organisation-to.html
நன்றி  : http://www.facebook.com/mohaashik (MuhammadAshik Bin HabibMuhammad (உலகக்குடிமகன்)

கருத்துகள் இல்லை: