செவ்வாய், 20 டிசம்பர், 2011

காரை எடுத்துச் செல்வது தொடர்பாக ஆணையருக்கு பளார் விட்ட கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர்



நீடாமங்கலம் : ஆணையரை அதிமுக நகராட்சி தலைவர் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் அதிமுகவை சேர்ந்த ஜெயராஜ். இவர் கடந்த முறை கவுன்சிலராக இருந்தவர். கடந்த 14ம் தேதி நகராட்சிக்கு சொந்தமான காரை தலைவர் எடுத்துச் செல்ல தயாரானார். அப்போது அங்கு வந்த ஆணையர் நாராயணன், கலெக்டர் அலுவலகத்தில் சிறுசேமிப்பு தொடர்பான கூட்டம் இருப்பதால் அங்கு செல்ல கார் தேவை என்று தலைவர் ஜெயராஜிடம் கூறினார். அதற்கு ஜெயராஜ், வாடகை காரை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். இதனால், 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின் அன்று மாலை ஆணையரை தனது அறைக்கு அழைத்து சென்றார் தலைவர் ஜெயராஜ். சிறிதுநேரத்தில், தலைவர் அறையிலிருந்து, ஆணையர் நாராயணன் கன்னத்தை பிடித்துக் கொண்டு அலறியபடி வெளியே ஓடி வந்தார். அலுவலகத்தில் இருந்த ஊழியர்களிடம், தலைவர் தன்னை அறைந்துவிட்டதாக கூறினார். இதைக்கேட்டு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த துணைத்தலைவர் முகமது அசரப் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் அங்கு சென்று 2 பேரையும் சமாதானப்படுத்தினர்.

இது குறித்து, நகராட்சி ஆணையர் நாராயணன் நேற்று கூறுகையில், “காரை நான்தான் எடுத்துச் செல்வேன் என்று கூறியதால் என் கன்னத்தில் அறைந்து, கீழே தள்ளினார். இது குறித்து, உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன்“ என்றார். கண்டித்தேன் அடிக்கவில்லை: நகராட்சி தலைவர் ஜெயராஜ் கூறுகையில், “நகராட்சி ஆணையர் மீது பாலியல் குற்றச்சாட்டு உள்ளது. அது தொடர்பாக ஏராளமான புகார்களும் வருகிறது. இதனால் நான் அவரை எனது அறைக்கு அழைத்து கண்டித்தேன். அதை மறைக்க, நான் அடித்துவிட்டதாக அவர் கூறுகிறார். இதில் உண்மை இல்லை“ என்றார்.

நன்றி : http://www.dinakaran.com/News_detail_2011.asp?Nid=11290

கருத்துகள் இல்லை: