வியாழன், 17 ஏப்ரல், 2014

எங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் -தமிமுன் அன்சாரி ம.ம.க பொதுச் செயலாளர்

இன்றைய நக்கீரனில் நமது பொதுச்செயலாளர்

நாட்டை வழி நடத்தவும், மக்களுக்கு சேவை யாற்றவும், அரசியல் களம் இன்றியமையாததாக இருக்கிறது. இன்றைய அரசியல் என்பது வணிகம், சுயநலம், சாதியம், மதவாதம் போன்ற அழுக்குகளால் சூழப்பட்டுள்ள நிலையில்; சேவை சார்ந்த அரசியலை முன்னெடுத்து, தத்துவங்களை மையப்படுத்தி 2009 பிப்ரவரி 7 அன்று மனித நேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.

சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற கொள்கைகளை முன்னிறுத்தி, சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தலித் மக்களின் ஜனநாயக உரிமைகளை முழங்கியும், அவர்களின் வாழ்வுரிமைப் போராட்டங்களை வழிநடத்தியும் எமது மனிதநேய அரசியலை செயல்படுத்தி வருகிறோம்.

கொள்கை சார்ந்த நெறிமுறைகளின் வழியாக எமது தொண்டர்களை மிகச்சிறந்த ஜனநாயகவாதிகளாக வார்த் தெடுக்கிறோம். "மக்களைத் திரட்டு -அரசியலை மாற்று'’’என முழங்குகிறோம்.

அரசியல் வழிகாட்டி முகாம்கள், பண்பு பயிற்சி முகாம்கள், பேச்சாளர் பயிற்சி முகாம்கள் நடத்தி ஒவ்வொரு தொண்டரையும் ஒரு தலைவரைப் போலவும்; ஒவ்வொரு தலைவரையும் ஒரு தொண்டரைப் போலவும் பக்குவப்படுத்தி அவர்களை களமாட அனுப்புகிறோம்.

நாங்கள் தலைவர்களை முன்னிலைப்படுத்துவதில்லை. மாறாக, தத்துவங்களை முன்னிலைப் படுத்துகின்றோம். தனிநபர் துதி பாடலைத் தவிர்த்து, கூட்டுத் தலைமையை முன்மொழிகிறோம். எமது மனிதநேய அரசியல் என்பது குரலற்ற மக்களின் குரலாகவும்; தலைமைத்துவம் இல்லாத சமூகங்களின் தலைமையாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதன் விளைவாகவே, வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமூகத்தின் இதயத் துடிப்பாகவும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் உரிமைக் குரலாகவும், நசுக்கப்படும் தொழிலாளர்களின் போர்க் குரலாகவும், ஒடுக்கப்படும் மக்களின் இடிமுழக்கமாகவும் மனிதநேய மக்கள் கட்சியின் கொள்கைகள் இருக்கின்றன.

முல்லைப்பெரியாறு அணை உரிமைப் போராட்டம், காவிரி பாசன விவசாயிகளின் வாழ்வுரிமைக் களம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் எழுச்சி, டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுப்புக்கு எதிரான கலகங்கள், கல்பாக்கம் அணு மின்நிலைய எதிர்ப்பு யுத்தம், நாகை மாவட்டத்தில் அனல் மின் நிலையங்களுக்கு எதிரான கிளர்ச்சி, ஆற்று மணல் கொள்ளைகளுக்கு எதிரான அறப்போர் -என தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கான போராட்டங்களில் தீவிரமாய் களமாடிவரும் வரலாறு எமக்கு இருக்கிறது. அதுமட்டு மல்லாமல், ஈழத்தமிழர் விவகாரத்தில் கட்சி தொடங்கிய நாள் முதல் ஒரேநிலைப்பாட்டில் சமரசமின்றி அம்மக்களுக்காக மனிதநேய மக்கள் கட்சி போராடி வருவதில் எங்களுக்கு மன திருப்தி உண்டு.

2009 நாடாளுமன்றத் தேர் தலின்போது, ‘இலங்கையில் ஈழத் தமிழர்களை கொத்துக் கொத்தாய் கொன்றொழித்த சர்வாதிகாரி ராஜபக்சேவை, சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்த வேண்டும்’என முதல் குரலை மனிதநேய மக்கள் கட்சிதான் எதிரொலித்தது. ஆம்! மற்றவர்கள் தாமதமாய் சிந்திக்கும் யாவற்றையும், முன்கூட்டியே பிரகடனம் செய்வதுதான் மனிதநேய மக்கள் கட்சியின் தனித்துவ அரசியலாகும்.

புலிப்படை தலைவர் பிரபா கரன் அவர்களின் மகன் பாலச் சந்திரன், சிங்கள பேரினவாத ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட துக்க செய்தி உறுதியானபோது; உலகத் தமிழர்கள் விம்மி அழுதபோது; உலக அளவில் முதலில் களமிறங்கி, சென்னையில் இருக்கும் இலங்கை துணைத் தூத ரகத்தை முற்றுகையிட்டு; எதிர்ப்பை பற்றவைத்த துணிச்சல் பலரும் வியந்த ஒன்றாகும்.

ஃபாஸிஸம், சாதியவெறி, மதவெறி, வன்முறை, தீவிரவாதம் உள்ளிட்ட மக்கள் விரோத செயல் பாடுகளுக்கு எதிராக மக்களை தட்டியெழுப்பும் விழிப்புணர்வு அரசியலை பொறி பறக்க பரப்புரை செய்வதில் நாங்கள் எப்போதும் முன்னிலை வகிக்கிறோம். தோழமை யை உயிராக மதிப்பதும்; பகைமை யைக் கூட பக்குவமாக எதிர் கொள்வதும் நாங்கள் பின்பற்றும் பொதுவாழ்வின் இலக்கணமாகும்.

இந்தியாவின் ராஜபக்சே வாகத் திகழும் நரேந்திர மோடியை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி; இலங்கையின் நரேந்திரமோடியாகத் திகழும் ராஜபக்சேவை எதிர்ப்பதாக இருந்தாலும் சரி; நீதியின் நெறிபிறழாமல் எதிர்ப்பதே எம் கொள்கையாகும்.

உலகமெங்கும் வாழும் ஒடுக்கப்பட்டவர்களும், சிறுபான்மையினரும் எமது சொந்தங்களாகும். அந்த வழியிலேயே இந்தியாவில் வாழும் சிறுபான்மை யினரில் பெரும்பான்மையினராக வாழும் முஸ்லிம்களின் வாழ்வுரிமைக் களங்களில் முதல் நிலை வீரர்களாய் அணிவகுக்கின்றோம். அதேபோல் கிறித்தவர்கள் உள்ளிட்ட இதர சிறுபான்மையினரின் நலன்களுக்காகவும் போராடுகிறோம்.

இது முஸ்லிம்களுக்கு மட்டுமேயான கட்சி அல்ல. முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட, பெரும் பான்மை சமூகங்களையும் அங்கத்தினர்களாகக் கொண்ட ஒரு ஜனநாயகப் பேரியக்கமாகும்.

மதச் சார்பின்மைக்கு ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விளக்கங்கள் உண்டு. மதம் சார்ந்த நிலைகளிலிருந்து முற்றிலு மாக விலகியிருக்கும் கொள்கைதான் மேற்கத்திய நாடுகள் பின்பற்றும் மதச் சார்பின்மையாகும். ஆனால் நாம் முன்வைக்கும் மதச்சார்பின்மை என்பதற்கான அர்த்தம், அனைத்து மதத்தினருக்கும் மத்தியில் பொது ஒற்றுமையைக் கடைப்பிடிப்பதும், அதன்வழியே சிறுபான்மையினரின் வாழ்வுரிமைகளைக் காப்பது என்பதுமாகும். அதன் ஊடாகவே எமது அரசியல் பயணம் தொடர்கிறது.

மாற்று அரசியலுக்காகக் குரல் கொடுக்கும் நாங்கள், களங்களில் சமூக நீதிக்காகவும்; சமூக நல்லிணக்கத்திற்காகவும்; சில சமயங்களில், சில சமரசங்களை செய்து கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. இந்திய ஜனநாயக சூழலில் அரசியலையும், கொள்கைகளையும் கவனமாக ஒன்றுக்கொன்று உரசிக் கொள்ளாதவாறு கையாள வேண்டியிருக்கிறது.

நாங்கள் பாதைகளை மாற்றுவதில்லை; ஆனால் குதிரைகளை மாற்றுவதுண்டு. எமது அரசியல் பயணத்தில் நாங்கள் விமர்சனங்களுடன் கூடிய, தோழமைகளைப் பேணுகிறோம். அது ஆரோக்கியமான அரசியலுக்கும், தூய்மையான நட்புக்கும் வழிகாட்டுகிறது.

திராவிட இயக்க சிந்தனைகள், தமிழ் தேசிய சிந்தனைகள், இடதுசாரி - முற் போக்கு சிந்தனைகள் ஆகியவற்றோடு எப்போதுமே நட்பு பாராட்டும் அரசியலை முன்னெடுக்கிறோம். ஏகாதிபத்திய எதிர்ப்பு, பன்னாட்டு பெருநிறு வனங்களின் சுரண்டல், கட்டுப்பாடற்ற கலாச்சார சீரழிவுகள், இயற்கை -சுற்றுச் சூழலுக்கு எதிரான பன்னாட்டு சூழ்ச்சிகள் என உலக அரசியலையும் பேசுகிறோம். வணிக அரசியல், தேர்தல் சீர்திருத்தம், சிறுபான்மையினருக்கு எதிரான சதிகள், தலித்துகள் -பழங்குடிகளுக்கு எதிரான அடக்குமுறைகள், அரச வன்முறைகள், மனித உரிமை மீறல்கள் என உள்நாட்டு அரசியலையும் பேசுகிறோம்.

ஊழலின் நிழலைக்கூட நெருங்கக்கூடாது என்கிற உன்னத லட்சியத்தோடு, அரசியலை மாபெரும் சேவைக்கான களமாக கருதும் எண்ணங்களோடு எமது களப்பணிகள் 5 ஆண்டுகள் நிறைவு பெற்று ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஆலை முதலாளிகளும் பண்ணை ஜமீன்களும் பன்னாட்டு பண முதலைகளும் இந்திய அரசியலை ஆக்கிரமித்து வரும் சூழலில் மனசாட்சியுள்ள குடிமக்களை நம்பியே எங்களின் அரசியல் இருக்கிறது.

தூய்மையான எண்ணங்களோடும் நேர்மையான அணுகுமுறைகளோடும் உயர்வான கொள்கைகளுடனும் கண்ணியமாக அரசியல் பணியாற்ற துடிக்கும் மனிதநேய மக்கள் கட்சியை வலிமையாக்க எங்களுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.

ஆற்றலும் அறிவும் நேர்மையும் கொண்ட அடித்தட்டு மக்கள் யாவரும் கட்சியின் உயர் பொறுப்புக்கு வரலாம் என்கிற சுதந்திர விதிகளைக் கொண்ட மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அதிகாரத்தில் வலிமை பெற வர விரும்புகிறது. ஜனநாயகத்தை அனைவருக்கும் பொதுமைப்படுத்தவும் அரசியல் அதிகாரத்தை எளியவர்களுக்கும் விரிவுபடுத்தவும் மனிதநேய மக்கள் கட்சிக்கு தோள்கொடுங்கள் என உரிமையோடும் உணர்வோடும் கேட்கிறோம்.

தற்போது இரண்டு சட்டமன்ற உறுப்பினர் களுடனும், நூற்றுக்கணக்கான உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுடனும் ஊழலற்ற; நேர்மையான மக்கள் பணியை செய்துவரும் நாங்கள், இப்போது நாடாளுமன்றத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம். இந்தியாவின் முதுபெரும் தலைவர் டாக்டர் கலைஞர் தலைமையிலான தி.மு.க., முஸ்லிம்லீக், விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம் அங்கம் வகிக்கும் ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியினர், போர்வீரர்களாக களத்தில் நிற்கின்றனர்.

எமக்கு மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு இறைவன் அருளால் நாங்கள் பெறக்கூடிய வெற்றி எமது அரசியலில் திருப்புமுனைகளையும், புதிய நம்பிக்கையையும் தரும் என எதிர்பார்க்கிறோம்.

ஐயா பெரியார், பேரறிஞர் அண்ணா, கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத், பெருந்தலைவர் காமராஜ், ஐயா முத்துராமலிங்கத்தேவர், தாத்தா ரெட்டைமலை சீனிவாசனார், தோழர் ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் பக்குவப்படுத்திய தமிழ்மண்ணில் ‘வட இந்திய அரசியல் கலாச்சாரம்’ ஃபாசிச வடிவில் வேர்விடத் துடிப்பதை எதிர்க்கிறோம்.

இன்று தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், புதிய தமிழகம் உள்ளிட்ட சமூக நீதிக் கட்சிகளின் அணியில் மனிதநேய மக்கள் கட்சி முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கூட்டணியை புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றிபெறச் செய்யும் உத்திகளோடு புறப்பட்டிருக்கிறோம். எமது கொள்கை அரசியலை ஏற்று நாடே எங்கள் பின்னால் அணிவகுக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், இன்று விதைகளைத் தூவுகிறோம்; நாளை வரும் தலைமுறைகள் அதை அறுவடை செய்யும் என நம்புகிறோம்.

நாங்கள்தான் அடுத்த ஆட்சியைக் கைப்பற்று வோம் என்று கூறவில்லை. ஆனால், நாங்கள் இல்லாமல் எந்த ஆட்சியும் இல்லை என்பதை அழுத்திச் சொல்கிறோம்.

எளிய மக்கள் அரசியல் அதிகாரத்தில் வலிமை பெறவேண்டிய கொள்கைப் பிடிப்புடனும், லட்சிய வேட்கையுடனும் தேர்தல் களத்தில் நிற்கும் மனிதநேய மக்கள் கட்சியை மக்கள் ஆதரிப்பார்கள் என்பது எங்களின் அசைக்க முடியாத நம்பிக்கை

கருத்துகள் இல்லை: